புறவழிச் சாலையோரங்களில்
புலம் பெயருங்கள்
இடை நில்லாப் பேருந்துகளில் – இனி
கிராமத்தாருக்கு இடமில்லை
நகரத்தை விட்டு நாலுமைல்
தொலைவில் உள்ளீர்களாம்
விரைவஞ்சல் நிறுவனங்கள்
கடிதப் பதிவுகளை ஏற்க மறுக்கின்றன.
பள்ளிக் கூடத்திற்குப் பாவம்
பிள்ளைகள்
பத்துக் கிலோமீட்டர் அலைகிறார்கள்
சாராயக் கடைகள் மட்டும்
சந்துக்கு இரண்டுண்டு
இனி
உங்கள் கிராமத்தை
நகரத்திற்கருகே
நகர்த்துவதைத் தவிர
வேறு வழியில்லை...