பொதிகைத் தொலைக்காட்சியில் வரும் ஞாயிறு மதியம் 1.30 மணி முதல் 2.00 மணி வரை இசைக்கவி ரமணன்,சசிகலா பாபு ஆகியோருடன் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் ச.மகாதேவன் ’’கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்’’ எனும் நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கவிதை வழங்குகிறார்




புலரும் புதுயுகத் தமிழ்

பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி
தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி),
ரஹ்மத் நகர், திருநெல்வேலி 627 011.

ஆய்வின்முன்னுரை
      “தகுதி உள்ளதே தப்பிப் பிழைக்கும்“ என்ற டார்வீனின் விலங்கியல் கோட்பாட்டின்படி, மனிதன் தப்பிப் பிழைப்பதன் காரணம், காலத்துக்கேற்பத் தன்னை மாற்றி நவீனமயமாக்கித் தற்காத்துக் கொண்டதுதான்.  பன்னீராயிரம் ஆண்டு இலக்கிய, இலக்கண வரலாறு பெற்றது தமிழ்.  உலக நாடுகளின் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ, கிரேக்கம், எபிரேயம், இலத்தீன், சீனம், அரபு ஆகிய மொழிகளோடு தமிழையும் செவ்வியல் மொழியாக ஏற்று அதன் தொன்மை, வரி வடிவம் ஆகியவற்றை ஆராய முற்பட்டது என அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா குறிப்பிடுகிறார்.  தொன்மையும் உண்மையும் மென்மையும் கொண்ட தமிழ் கணினி யுகத்தில் புதுயுகத் தமிழாக உருப்பெற்று வரும் இக்காலத்தில் தமிழ், கற்பித்தல், கற்றல் குறித்த கருத்துக்களை இக்கட்டுரை முன் வைக்கிறது.
நவீனப் பார்வை
      தேமதுரத் தமிழோசை இணையமெலாம் ஒலித்திடும், புது யுகத்தில் தமிழ் கற்பித்தலும் கற்றலும் உருமாறுவது தவிர்க்க முடியாது.  தொலைக்காட்சிப் பெட்டி இன்று எவ்வாறு மனித சமுதாயத்தை ஆட்டிப் படைக்கிறதோ அதேபோல் இணைய ஊடகமும் ஆட்டிப் படைக்கத் தொடங்கி உள்ளது.  தட்டச்சுப் பலகை மூலம் தேடு பொறிகளுக்குக் கட்டளை இட்டால் விரல் நுனியில் மலைபோல் தரவுகளைத் தொகுத்து அளிக்கும் நிலையில், வகுப்பறை வாசித்தல்களும், அருஞ்சொற்பொருள் விளக்கங்களும், பொழிப்புரை, பதவுரை கூறுதலும் நாளை பொருளற்றுப் போகக்கூடும்.  அப்போது வரும் மாணாக்கர் கூட்டம் மிதமிஞ்சிய அறிவுக் களஞ்சியமாகத் திகழக் கூடும்.  ஓர் ஆசிரியர் உலகின் ஒரு கோடி இணைய மாணவர்களுக்கு ஒரே சமயத்தில் வகுப்பெடுக்கக் கூடும்.

தமிழியல் நாளை.....?
1.     “தமிழ் மொழியாம் தாய்மொழியைக் கற்காமலேயே தமிழ்நாட்டில் எல்.கே.ஜி. முதல் எம்.பி.பி.எஸ் வரை பயின்று விடலாம்“ என்ற கொடுமையான நிலை மாற வேண்டும்.  தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி, தொழிற்கல்வி, மருத்துவக் கல்வி என்று எந்தக் கல்வியாக இருந்தாலும் தமிழ் பயில்வது கட்டாயமாக்கப்பட வேண்டும்.  ஒரே தமிழாக இல்லாமல், அந்தந்தத் துறைகளுக்கேற்ற பயன்படு தமிழாக அக்கல்வி வடிவமைக்கப்பட வேண்டும்.
2.     கல்லூரிகளில் பகுதி – 1 என்று தமிழ் இருந்தாலும், அந்த மதிப்பெண்கள் பட்டம் வழங்கும் போது தர மதிப்பீடுகளுக்கு ஏற்கப்படாததால், மாணவர்களுக்கு அது பொழுதுபோக்கும் வேடிக்கை வகுப்பாகவே தற்சமயம் அமைகிறது.  இந்நிலை எதிர்காலத்தில் மாற்றியமைக்கப்பட்டு, அந்த மதிப்பெண்களும் தர மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்பட வெண்டும்.
3.     படித்தலையும் தேர்வு எழுதுதலையும் மட்டுமே முதன்மை நோக்கமாகக் கொள்ளாமல், மாணவர்களைப் படைப்பாளிகளாக்கும் வகையில் நவீன முறையில் தமிழ்ப்பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.
4.     வகுப்பறை சார்ந்துமட்டும் அமையாமல் பண்பாடு, மக்கள் வாழ்வியல் சார்ந்த கள ஆய்வுகள், பங்கேற்றல் அனுபவங்களைத் தரும் வகையில் பாடங்கள் அமைதல் வேண்டும்.
5.     பி.ஏ.(தமிழ்), எம்.ஏ (தமிழ்) போன்ற இலக்கியம் சார்ந்த பாடங்களோடு இணையப் பயன்பாட்டுத்தமிழ், மக்கள் தொடர்பு ஊடகத் தமிழ், கலைச்சொல் உருவாக்கத்தமிழ், இதழியல்மொழிசார்ந்த தமிழ் போன்றவற்றைத் தற்போதுள்ள நிலையைவிட இன்னும் மேம்பட்ட நிலையில் அளித்தால் தமிழ் கற்போர் ஆர்வம் மேம்படும்.
6.     சங்க இலக்கியங்களைப் பொருள் சொல்லி விளக்குவதோடன்றி, நவீனத் துறைகளான அழகியல், அமைப்பியல், உளவியல், சமூகவியல் போன்றவற்றின் அடித்தளத்தோடு நவீனக் கோட்பாட்டு முறையில் இன்னும் சிறப்பாக நடத்தலாம்.
7.     பல்கலைக்கழகங்களில் உரைநடைக்கான, கவிதைகளுக்கான, சிறுகதைகளுக்கான, புதினங்களுக்கான, கடிதஇலக்கியங்களுக்கான தனித்தனித் துறைகள் ஏற்படுத்தப்பட்டு நவீனக் கோட்பாட்டு ஆய்வுகள் பயன் மிகுந்த முறையில் நிகழ்த்தப்பட வேண்டும்.
8.     இளநிலை படிக்கும் மாணவ மாணவியரைக் கள ஆய்வில் ஈடுபடவைத்து, அந்தந்த வட்டாரம் சார்ந்த வட்டார வழக்குச் சொல் அகராதிகளைத் தொகுத்து இணையத்தில் அவற்றை சேமிக்க வகை செய்ய வேண்டும்.  பிங்கல நிகண்டு, திவாகர நிகண்டு என்று நாம் அறிந்தவற்றின் அடிப்படையில் சொற்கள் வகை தொகை செய்யப்பட வேண்டும்.
9.     அயற்புலம் சார் தமிழர்களை முன்நிறுத்திப் பல்கலைக்கழகங்களில் புலம்பெயர் தமிழ்ப் படைப்பாளர்களின் படைப்பிலக்கியங்களுக்காகத் தனித்துறைகளை அமைக்கப் பெற்று, அவர்களின் நேரடி அனுபவங்களைப் பெற்று அவ்விலக்கியங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
தமிழ் இணையத் துறை
      ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் இணையத் தமிழுக்கென ஒரு தனித்துறை உருவாக்கப்பட வேண்டும்.  எல்லாக் கல்லூரி மாணவர்களுக்கும் கணினிப் பயிற்சி அளிப்பதோடு, ஒவ்வொரு மாணவனுக்கும் குறிப்பிட்ட பக்கவரையறை தந்து e-format எனும் மின்னணு வடிவத்தில் தமிழ்ப் படைப்பிலக்கியங்கள் அனைத்தையும் இணையத்தில் சென்று சேர்க்க ஆவன செய்ய வேண்டும்.  சில இணைய அன்பர்கள் இத்தொண்டினை எவ்விதப் பலனும் பாராமல் தற்போது செய்து வருகிறார்கள்.  சங்க இலக்கியமும், நீதி நூல்களும், பக்தி இலக்கியங்களும், சிற்றிலக்கியங்களும், நவீன படைப்பிலக்கியங்களும் இணையப்பக்கங்களில் சேமிக்கப்படும்போது கற்பித்தல் எளிமையாகிறது.
ஒலி சார்ந்து கற்பித்தல்
      தமிழ் இலக்கியத்தைக் கற்றுத்தருவது இன்றைய சூழ்நிலையில் எழுத்துக்களைச் சார்ந்தும், சொற்களைச் சார்ந்தும் அமைகிறது.  தமிழ் இலக்கியங்களை ஒலிசார்ந்து கற்றுத் தருவதற்காக ஒவ்வொரு கல்லூரியிலும் “மொழி ஆய்வகம்“ ஏற்படுத்தப்பட்டுத் தமிழின் நுட்பமான தனித்துவம் எதிர்காலத்திலும் நிறுவப்பட வேண்டும்.  லகர, ளகர, ழகர வேறுபாடுகள் சார்ந்த இனிமை போன்றவற்றை மொழிஆய்வகம் மூலம் எதிர்காலத்தில் மிக நுட்பமாகக் கற்றுத்தரலாம்.
சுவடிகள் பாதுகாப்பு
      பள்ளி, கல்லூரித் தமிழாசிரியர்கள் தங்களிடம் பயிலும் மாணவ மாணவியரைக் கொண்டு அவரவர்ப் பகுதியில் கிடைக்கும் அரிய ஓலை சுவடிகளைத் தேடி எடுத்துப் பாடம் செய்து பல்கலைக்கழகங்கள் மூலம் பதிப்பிக்க வேண்டும்.  உ.வே.சா. செய்த உன்னதமான பணியை இன்று தமிழ்ப்பேராசிரியர்கள் செய்வது காலத்தின் கட்டாயம்.  அச்சுவடிகள் கணினி மூலம் ஸ்கேன் செய்யப்பட்டுக் குறுந்தகட்டில் பத்திரப்படுத்தப்பட்டால் நாளைய தலைமுறை அவற்றை ஆராய முடியும்.  மேதகு முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர். ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்கள் ஓராண்டுக்கு முன் ஆற்றிய உரையில், “உலகின் உன்னதமான திருக்குறள் மூலச் சுவடிகளை நாம் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.  உடனடியாக அதைக் கண்டறிவது அவசியம்“ எனக் குறிப்பிட்டார்.  கண்டுபிடிக்கப்படாத சுவடிகளில் தமிழின் நாட்டார் பாடல்கள், சிற்றிலக்கியங்கள், சங்க இலக்கியச் செய்யுள்கள் இன்னும் பல தமிழகத்தின் கிராம, நகரப் பகுதிகளில் இருட்டறைகளில் மறைந்து கிடக்கின்றன.  அவற்றை எடுத்துப் பத்திரப்படுத்தி எதிர்கால ஊடகங்கள் மூலம் அடுத்த தலைமுறைக்குத் தர வேண்டும்.
கல்வெட்டுப் பதிவுகள்
      தமிழ், எழுத்துகளோடு மட்டும் தொடர்புடைய மொழியன்று.  பண்பாட்டோடு தொடர்புடைய மொழி.  உலகின் முதல் மனிதன் தோன்றியதாகக் கருதப்படும் லெமூரியாக் கண்டத்தை ஆழ்கடல் ஆய்வுக்கு உட்படுத்தும் முயற்சி வரும்காலத்தில் முக்கியமானதாகக் கருத வேண்டும்.  திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஸ்ரீ வைகுண்டம் பகுதி சார்ந்த ஆதிச்ச நல்லூரில் முதுமக்கள்தாழிகள் கிடைத்துப் பல திருப்பங்களை உண்டாக்கியது.  எதிர்காலங்களில் தமிழ் மாணவர்களுக்குத் தொல்லியல், மானுடவியல் அணுகுமுறைகள் வெவ்வேறு முறைகளில் கற்றுத் தரப்பட்டுத் தொல்லியல் சான்றுகளை ஆராயும் தன்மையைத் தர வேண்டும்.
      கல்வெட்டு எழுத்துகளைக் கணினி மூலம் பட முறையால் விளக்கி அப்படிப்பைத் தமிழ் மாணவர்களுக்குக் கட்டாயமாக்க வேண்டும்.  மாதம் ஒரு முறை மாணவர்களைக் கல்வெட்டு தொடர்பான கள ஆய்வுகளுக்கு அனுப்புவதன் மூலம் அரிய கல்வெட்டுகளை நம்மால் அறிந்து பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குத் தர முடியும்.
ஆய்வு முடிவுரை
      மொழி நவீனமாகும் போது, பண்பாடு எழுச்சி அடைகிறது.  தமிழ் என்றால் இனிமை என்பதோடு, இனி அனைத்தும் உள்ளடக்கிய நவீனப் புதுமை என்ற பொருள் புனையப்படட்டும்.  கல்தோன்றி மண் தோன்றிய கதையைச் சொல்லி மட்டுமே எதிர்காலத்தில் காலம் தள்ளவிட முடியாது.  காகிதமில்லாப் புத்தகங்களிலும், தமிழ் நவீன மின்னணு அங்கியோடு இணைய ஆட்சி செய்யும்.  அன்று கணினி முன் எல்லாரும் கம்பராமாயணத்தைப் படக் காட்சிகளோடு ஒலி, வரி வடிவில் கற்பார்கள்.
      அன்று வீடுகளே வகுப்பறையாகும்.  காஞ்சி நகர்ப் புலவன் பேசும் உரைதனைக் கனடாத் தமிழன் நேரடி இணைப்பில் நிறைவாகப் படிப்பான்.  கற்போரெல்லாம் கவிதை எழுதுவர்:  மாணாக்கர் மனிதம் பேணுவர்.  கலாநிதி கைலாசபதி போன்று, ரசிகமணி போன்று, வண்ணதாசன், கலாப்பிரியா போன்று, விக்ரமாதித்யன் போன்று, நா. வானமாமலை, வையாபுரிப் பிள்ளை போன்று புதிய நோக்கிலும் போக்கிலும் தமிழ் மாணவன் வீறு கொண்டு எழுவான்.
      எதிர்காலத்தில் தமிழ்த் துறையின் துணையாக ஆயிரமாயிரம் புதிய துறைகள் புலரும்.  இலக்கணக் குறிப்பு கற்பது மட்டுமே தமிழ்க்கல்வி என்ற நிலை மாறி, இணையப் பூங்குன்றனார்கள் “யாதும் ஊரே யாவரும் கேளிர்“ என்று புதிய பூபாளம் இசைப்பர்.  அன்று உலகத் தமிழரெல்லாம் நவயுகத்தமிழைத் தமிழ் விடு தூது விட்டுப் போற்றி மகிழ்ர்.
ஓங்கலிடை வந்(து) உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலி நீர் ஞாலத்(து) இருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது
தன்னேர் இலாத தமிழ்“
தமிழால் இன்றும், என்றும் நவீனமாக நவயுகம் படைக்க முடியும்.  எதிர்காலத்தில் உலக மொழிகளெல்லாம் தமிழின் தனிச்சிறப்பை மொழிபெயர்த்துத்தரும்.

சென்னைப் பல்கலைக்கழகம் நடத்திய “தமிழியலின் எதிர்காலவியல்“ பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை.

1997 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ. கமல்ஹாசன் அவர்கள் நடத்திய கட்டுரைப் போட்டியில்மாநில அளவில் முதலிடம் பெற்ற கட்டுரை

         ”மெல்லத் தமிழ் இனி...
       பாசத்திற்குரிய பாரதிக்கு,


தமிளில் பெயிலாகிப் போன தமிளுவேந்தன் எழுதுவது. நீ நளமா? நான் நளமா இல்லை! உன் மேல் என்றைக்குமே எங்களுக்குத் தீரா வெறியுண்டு.  மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்று, பேதைக்குரலில் பெரிதாகச் சொன்னாயே… உன் வார்த்தைகளுக்கு நாங்கள் வாழ்க்கைக் கொடுத்துவிட்டோம்.
    சந்தக் கவியெடுத்து, செந்தமிழை அதில் குழைத்து மந்தத் தமிழினனத்தை மந்திரிக்க வந்த தமிழ், இன்று சீழ்பிடித்து, அயல் மொழியின் கால்பிடித்து மயானத்தை நோக்கி மாட்டு வண்டியில் போய்கொண்டிருக்கிறது! கவிஞர் பட்டங்களோ இன்றைக்குக் காசுக்குக் கிடைக்கின்றன, முனைவர் பட்டங்களோ மூர் மார்க்கெட்டில் விற்கின்றன.  கடைகளில் சிலேபி விற்கும் அளவுக்குகூடச் சிலப்பதிகாரம் விற்க மறுக்கிறது. 
அதோ பார், பாரதி! ஓடம் முழுக்க ஓட்டைகளோடு, காலங்கையின் கடைசிப் பயணயாய் நம் தமிழ், காரணம்... உம் நேசமிகு நெட்டை நெடுமரங்கள்...
    தேன் தமிழில் பேசினால் ஏன் தமிழில் பேசினாயென்று சண்டைக்கு வரும் கூட்டம் ஒருபுறம், துவிச்சக்கரவண்டியேறித் தொல்காப்பியத் தோட்டத்தில் தொடரோட்டம் நடத்துச் சொல்லும் கூட்டம் மறுபுறம். இடையில் ஊமை நாடகத்தின் உலவும் பாத்திரமாய் உன் உன்னதத் தமிழன்னை.
    தமிழ்ப்பள்ளிகளில் தலைநிமிர்ந்து நிற்பதை விட, கான்வெண்டுகளில் கம்பி எண்ணுவதைத்தான் கவுரமாய் நினைப்பவர்கள் நாம் என்பதாலோ என்னவோ, ”அய்யா” என்ற அழைப்புக் கூட அவமதிப்பாக அங்கீகரிக்கப்பட்டு விட்டது.
நெஞ்சு பொறுக்குதிலையே
    பப்பாளிப் பாலெடுத்துப் பால்கோவா கிண்டச் சொல்லி ஸ்டார் டி.வி. யில் அந்நியர் யாராவது ஆங்கிலத்தில் சொன்னால், உண்டு பார்த்துவிட்டு, உன்னதச் சுவையென்று தலையை ஆட்டும்போது நம் சுயங்கள், மலடாகிப் போனதை மறுக்க முடியாது.
    சான்பிரான்சிஸ்கோவிலிருந்து சாணியை இறக்குமதி செய்து வந்து, சந்தன மணம் அதில் சார்ந்திருப்பதாய்ச் சாதிக்கும் இவர்களுக்குத் தாய்மொழி என்பது தரங்குறைந்த ஒன்றுதான்.
    ஒன்றைரை வரிகளில் உலகளந்த திருக்குறளும், சிந்தனை தரும் சிலம்பும், மேலான மதிப்பீடுகள் தந்த மேகலையும், சீவகனார் வளம்பாடும் சிந்தாமணியும், சங்க இலக்கியத்தின் பத்து எட்டொடு குண்டலகேசியும் சொல்லாததையா வேறு உலகஇலக்கியங்கள் விளக்கி விடப் போகின்றன? மற்ற துறைகளை வாழ்க்கைக்குப் படிக்கிறோம் என்றால் தமிழில் வாழ்க்கையைப் படிக்கிறோம்.
    ஒவ்வொருவரும் தங்கள் கடிகாரம் காட்டும் நேரமே சரியென்று சாதிப்பதைப்போல அந்தந்த மொழியினர், தத்தம் தாய் மொழியை முன்னிறுத்திப் பிடிப்பது வழக்கம்;  நம் தமிழைத் தவிர! தாய் மொழியினால் மட்டுந்தான் எவராலுமே சிந்திக்க முடியும்.  தாகூரின் கீதாஞ்சலி நோபல் பரிசு பெற்றதென்றால், அவரின் “சிந்திப்பு மூலம்” வங்கமொழி!  எழுத்தாளர் தோப்பில் மும்மது மீரான் தன் நாவல்களைத் தனக்கு நன்கு பரிச்சயமான மலையாளத்தில் சிந்தித்து, பின் அதைத் தமிழ்ப்படுத்துகின்றாராம்.
ஆனால் நம் கல்வி முறையில் நடப்பதென்ன? எல்.கே.ஜி. முதல் எம்.பி.பி.எஸ். வரை தமிழின் “அ“ கரத்தைக்கூட அறியாமலே தமிழ்நாட்டில் பட்டம் வாங்கி விட முடிகிறது.  ஒன்றுமே புரியாத பிஞ்சு வயதில் “நர்சரி நரகங்களில்“ அவர்களை நட்டு ஆங்கிலஅமிலத்தை அள்ளி ஊற்றும்போது கல்வி கற்பதே அதற்குக் கசப்பாகப் பதிந்து விடுகிறது.
இனி பொறுப்பதில்லை
    திருமண வீட்டில் உணவு உண்ணப் பந்தியில் அமரும்போது, சாதம், சாம்பார், ரசம், பாயசம், மோர் எனத் தனியே முறையாக உண்ணும் நாம், மொழியில் மட்டும் கூட்டாஞ் சோறுகளையே கூடுமானவரை கலக்கிறோம் என்பது கண்களில் கந்தக அமிலத்தை ஊற்றுவதை விடக் கொடுமையான செய்தி.
Pass பண்ணி Study பண்ணி Start பண்ணி, எனத் தமிழைப் பேசிக் கொண்டிருக்கும் போது தமிழ் வாழவா செய்யும்?  தான் இறந்தபின் தன் கல்லறையில், ”இங்கே தமிழ் மாணவன் உறங்குகிறான்” என்று எழுதுங்கள், என்று அயல்நாட்டுப் பாதிரியார் ஜீ.யூ.போப்பையர் மதி்த்த தமிழுக்கு, தெவசம் வைக்க இன்று தேதி குறிக்கிறோம்.  தமிழில் பெயர் வைத்தாலும் ஆங்கிலத்தில் தலையெழுத்துக்கள், ஓர் ஆங்கில நூலில் ச. MAHADEVAN என எழுதினால், தோலை உரித்து அவர்கள் தோல் பை செய்து விடுவார்கள்.  ஆனால் நாம்?
    ”பொந்தி சேரி – பாண்டிச்சேரி எனும் பெயர் அடிமையின் அடையாளம், எனவே புதுச்சேரி ஆக்குவோம் என மாற்றி நான்கு வருடமானபின்தான் தமிழ்நாடு MADRAS, சென்னையாக மாறுகிறது.  அரசு ஆணை பிறப்பித்த பின்னும் விமான நிலையங்களில் இன்னமும் ’மெட்ராஸ்’ என அழைக்க முடிகிறதென்றால் தமிழ் இனி வாழவா செய்யும்?
ALL INDIA RADIOவை அகில இந்திய வானொலியாக்கி விட்டோம் என ஒரு கூட்டம் சப்தம் போடும் அதே நேரம் டெல்லி தமிழ்ச் செய்தியறிக்கையில் ”ஆஷாஷ்வாணி… செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண் சுவாமி” என ஒலிக்கும்போது தமிழுக்கு, வாழும் வாய்ப்பு உண்டா என்ன?
இலக்கிய இடறல்கள்
    கேரளாவில் போய் “உங்கள் ஒப்பற்ற எழுத்தாளர் யார்?” என்றால் எந்தவித எதிர்க் கருத்துமின்றி எம்.டி. வாசுதேவன் நாயரையோ, பிறரையோ சொல்வார்கள்.  ஆனால் தமிழகத்தில்? ஊருக்கு ஒருவரைச் சொல்லி, கடைசியில் எவருமே இல்லை என்பார்கள்.  கோடிப் படைப்பாளிகளுக்குள் பல்லாயிரம் பிரிவினைகள்.  விளைவு  இலக்கியம் இடறலில்.
    கரன்ஸிக்காரர்களின் வியர்வைக்கு வெண்பா எழுவதும், ஹார்லிக்ஸை சோளநக்கியாக்கி, குளுக்கோஸைப் பருச்சருக்கரையாக மொழிமாற்றம் செய்யவும், முக்கல் முனகல்களின் இசைப்பள்ளங்களில் வார்த்தையை அள்ளிப் போட்டு நிரப்பும் ஆபாச வாகனமாயும் தமிழை மாற்றியபின் ’இலக்கியத்தமிழ்’ வாழவா செய்யும்?
இதயத்துடிப்பு நின்றுபோன இசைத்தமிழ்
    மாசில் வீணை வைத்து, மாலை மதியமும் பூண்டு, தேவாரப் பண்ணென்றும், தெவிட்டா நல்பாட்டென்றும், பூவாரமணம் பெற்ற புனிதஇசைத்தமிழ், இதயம் கிழிபட்டு இரணமாகிக் கிடக்கிறது. ”தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்” என்று அப்பரால் சப்பரத்தில் ஏற்றப்பட்ட சந்தத்தமிழ் சலுகைப் பருக்கைகளுக்காக இன்றைக்கு மொழிக்கலப்பில் மாட்டிக்கொண்டிருக்கிறது.   
இசையுலகின் மும்மூர்த்திகளான முத்துசாமி தீட்சிதரும், சியாமா சாஸ்திரியும், தியாகப்பிரம்மமுமான மூவருமே தமிழகத்தில் உதித்தவர்கள்தான்.  ஆந்திர விசயவாடாவின் சபாக்களில் போய் அமர்ந்து 24 மணி நேரமும் தமிழிசை பாடினால் சும்மா விடுவார்களா?  நாட்டுப்புறத் தமிழிசையை மறந்த சமுதாயத்தி்ன் முன் மெல்லத் தமிழ் துளிர்த்து விட முடியுமா?
நலிந்து கொண்டிருக்கும் நாடகத் தமிழ்
    நாடகத்துக்கே இலக்கணம் வகுத்து, சிலப்பதிகாரம் பேசிய சீர்மிகுகாலம் மாறி, காரை பெயர்ந்த கட்டிடமாய், வேரை இழந்த விருட்சமாய் தமிழ் நாடகங்கள் அழிவை நோக்கி அடியெடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றன.
    “How are you Bala? I am fine ya!” You became mad Ya... why? Because you are my friend.  இது மிகப்பிரபலமான தமிழ் நாடக கர்த்தாவின் தமிழ் நாடகத் தொடக்கம்... நிச்சயம் தமிழ் வாழும் தானே!
மனதில் உறுதி வேண்டும்...!
    ஓடு ஒழுகுவதைக் காரணம் காட்டி, வீட்டை விற்றுவிட்டுப் போய் விட முடியாது.  க்யூ வரிசையிலும், கேட்டுவாசலிலும், நடு சென்டரிலும் ”தமிங்கிலிஷ்,” படித்த நம் மனப்பான்மை மாற வேண்டும். ”சுத்தத் தமிழைப் பேசுங்கள்!” என்று சொல்ல வரவில்லை.  பேசும் தமிழைச் சுத்தமாகப் பேசுவோம் என்பதே என் அழைப்பு.
    தமிழ் என்றாலேயே கோவலன், கண்ணகி என்று பதிக்கப்பட்ட மதிப்பீடுகளை உடைத்தெறிய வேண்டும்.  எந்தத் துறைக்குமே சளைக்காத வகையில் தமிழும் நவீனத்தோடு கைக்கோர்த்து ஆண்டுகள் பலவாகி விட்டன.  அதையெல்லாம் தமிழறிஞர் ஏற்றுக்கொண்டு பிறருக்கும் அறிவித்தாக வேண்டும்.  அதற்கு விவாதங்களை முன்நிறுத்த வேண்டியது அவசியம்.   
    தூய வெண்துணியில் எந்த நிறத்தை ஏற்றினாலும், அது அதுவாகவே மாறிவிடும்.  ”இணையம்” வந்துவிட்ட நேரத்திலும் இலக்கணக் குறிப்புகளைப் பற்றியே ஆய்வுகள் நடந்து கொண்டிருந்தால், காலப்பேருந்து நம் காலில் ஏறிவிடும்.  தன் பிள்ளை என்பதற்காகக் காலக்முழுக்கக்  கக்கத்திலேயே தூக்கித் திரிந்தால் வளர்ச்சி என்பது வரப்போவதில்லை.
    சீக்குப்பிடித்த சிந்தனையை விட்டு விட்டுப், புதுமையைச் சிநேகத்தோடு வரவேற்போம்.  லேசரில் அச்சடிப்பதால், கம்பராமாயணமொன்றும் களங்கமாகி விடப் போவதில்லை.  முதலில் நம் தாய்மொழியை நாம் மதிப்போம்.  பின் உலகம் நம்மை மதிக்கும்.  அப்போது மெல்லத் தமிழினி வாழும் அந்த மேற்குமொழிகள் தனி புவிமிசை மாளும் ”பாரதி! உழவாரம் தூக்கிய அப்பர் மாதிரி, உறுதியைத் தூக்கிப் புறப்படுகிறோம்.
    காரணம்... உன்னைப் போல நானும், தாமிரபரணியின் தண்ணீர் குடிப்பவன்.
    எனது முதல் குறி அவன்தான்... அதோ பார்...
    அவன் பாடுவதை,
   

      ”தீராத விளையாட்டுப் பில்லை... கண்ணன்.
        தெருவிளே பெண்களுக்கோயாத தொள்ளை”

 
    ”இந்தியன்” தாத்தாவாக எழுகிறோம்... தமிழின் தலைகுனிவு நீக்க!


                                                                                        என்றும் அன்புடன்
                           தமிழ் வேந்தனாக

                      சவுந்தர மகாதேவன்,
                          பாளையங்கோட்டை.
 



என் தாயின்
சின்ன வயிற்றுக்குள்ளும்
சிரமமில்லாமல்தான்
இருந்தேன் .
இன்றோ எதற்கும்
விசாலம் தேடி
விரைகிறேன் .

ஒடுக்கமும்
விரிவும்
உள்ளுக்குள்
உள்ளது
என்பதை
 அறியாமல் ,

சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி 



ஊன்றக் கொடுத்த தடி
உச்சியைப் பிளந்த கதையாய்
தோன்றிக் கெடுக்கிறோம்
துதிக்க வேண்டிய
இயற்கையை .

சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி