வெளு

அழுக்கைச்
சுமப்பதே
இழுக்கென்றால்
வெளுப்பதெப்போது?

       - முனைவர். ச. மகாதேவன்


                  சொல்

வந்த தேதியை அறிவிக்கச்
சிலிண்டரில் ஒட்டப்பட்டுள்ள
காலண்டர்தாள் மாதிரி
கண்ணுக்குத் தெரியாத
காலக் காலண்டர்கள்
ஒட்டப்பட்டுள்ளதா
நம் முகத்தில்?
    - முனைவர். ச. மகாதேவன்

       
                         சாய் பாபா
கோடிக் கணக்கான
இதயங்களை வென்று
இமயமாய் உயர்ந்திட்ட
சத்ய சாய் பாபா அவர்களுக்கு
      "மகா பாரதி"
கண்ணீரைக்
காணிக்கை யாக்குகிறது


           விரைகின்றன விரல்கள்...

குண்டு குண்டாய்
லட்டு லட்டாய்
கண்ணில் ஒத்திக் கொள்ளும் படியான
எழுத்துக்கள்
மனிதர்களின் காலச்சுவடுகள்

தலைப் பொங்கலுக்குத்
தங்கச்சிக்குச் சீர்தர வேண்டி
ஆண்டி நாடார் பாத்திரக்கடையில் எடுத்த
பித்தளைப் பானையில்
அவளது பெயரைக் கை வெட்டில்
முத்து முத்தாய் எழுதித் தந்த
லோகு அண்ணாச்சியின்
கையழகை அதன் பின்
பல பாத்திரங்களில் எந்திரத்தால்
வெட்டப்பட்ட எழுத்துக்களில் ஏன் இல்லை?

சமாதானபுரச் சிற்பக் கலைக் கூடத்தில்



கைவெட்டால் கல்லெழுத்து எழுதிய அழகை
இன்று
கிரானைட் பலகையின் மீது
இறந்த மனிதரின் படத்துடன்
தரும் கணினித் தொழில் நுட்பத்தால்
ஏன் தர முடியவில்லை?

மின்னஞ்சலும், குறுஞ்செய்திகளும்
எழுத்தின் கழுத்தை
என்றைக்கோ
திருகிப் போட்டுவிட்டன
இப்போது
கோபாலசாமி கோவிலுக்குள் போனால்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட
கல்வெட்டுக்களைத் தேடி விரைகின்றன
என் விரல்கள்.
   - முனைவர். ச. மகாதேவன்


               தாழ்பாளற்ற நாட்கள்

விடியும் போதே வெறுப்பாயிருந்தது
மின்சாரமற்ற மின்விசிறி மேலே...
வியர்வையால்
பொது பொதுத்தத் தலையணை கீழே..

என்றைக்கும் இருக்கிற நாளாய்
இன்றைக்கும் இருக்கத்தான் வேண்டுமா?

புத்திசாலித் தனங்களைப்
புறந்தள்ளிய புதிய நாளை...
தொழுத கைக்குள்ளும் மறைந்திருக்கிற
குறுவாள்களைத் துப்பறிந்து தரும்
கண்களற்ற இனிய நாளை
வாகனங்களை முந்தி
தலை தெறிக்க அலுவலகம் ஓடாத ஓய்வு நாளை
டையது கட்டிப் பொய்யது பேசி
மெய்யதைத் தொலைக்காத தூய நாளை நோக்கிச்
சிறகுகள் பூட்டிய வண்ணத்துப் பூச்சி மாதிரிச்
சிந்திக்காமல் பறந்தேன்...
அறிவு இருப்பதையே மறந்தேன்...
இன்று ஒரு வேளை
என்னை எந்திரமாக்காத
ஞாயிற்றுக்கிழமையாக இருக்கலாம்..
இன்று, தாழ்பாள்கள் ஏதுமற்றுத்
திறந்து கிடக்கிறது
என் நந்தவன நாள்.
  - முனைவர். ச. மகாதேவன்


            அணிலாடு முன்றில்

 மலையான் ஊரணிக்கருகேயிருக்கும்
நாகி ஆச்சி வீட்டு முற்றத்தில்
கொய்யா மரமுண்டு...
அதில் கொய்யா
கொய்யாக் கனியுண்டு

கல்முகப்பிலமர்ந்து
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

வழுவழுப்பான மரத்திலிருந்து
அங்குமிங்கும் பார்த்தபடி
அணில் அந்த முற்றத்தில் இறங்குகிறது

பட்டுக் குஞ்சலத்தையொத்த அழகு வால்
முன்னிரு கரங்கள் ஏந்தி
முன்னிருக்கும்
பழத்தைக் கொறிக்கிறது
அவ்வப்போது
அங்குமிங்கும் மிரட்சிப் பார்வை வீசுகிறது

தடவிக் கொடுப்பதற்கு
இராமர்களுக்குப் பஞ்சமோ என்னவோ
நம் பக்கத்தில் வரவே பயப்படுகிறது

ஆச்சியின் அழைப்பிற்குத் திரும்பினேன்
பூனையின் வாயில்
அணில் மாட்டித் துடித்தது.

அதன்பின்பு
அணிலாடா அந்த
முன்றிலுக்குப் போக
மனமில்லை
    - முனைவர். ச. மகாதேவன்




                    குழுப்புகைப்படம்

ஒவ்வோர் ஆண்டும்
மூன்றாமாண்டு முடித்துச் செல்கிற
மாணவ மாணவிகளுடன்
குழுப் புகைப்படம் எடுத்துக்கொள்கிறபோது
யாரேனும் ஒருவர்
கண்ணை மூடத்தான் செய்கிறார்கள்

புகைப்படக் கருவியின்
ஒளி உமிழ் விளக்கு
கணநேரத்தில்
வெள்ளை ஒளிக் கற்றையை
வேகமாக வீசும்போது
யாரேனும் ஒருவர்
கண்மூடத்தான் செய்கிறார்கள்.

முந்தைய வினாடிகளை விடப்
பயன்பெறும் வினாடிகளில்
பல மடங்கு
கவனமாயிருக்கத்தான்
வேண்டியுள்ளது

கண நேரத்தில்
கண் மூடியவர்கள்
காலம் முழுக்கக்
கண்மூடியவர்களாய்
சட்டமிட்டு
பலரது வீட்டுச் சுவர்களில்
ஆணியில் படமாகத்
தொங்கவிடப்படுகிறார்கள்...
ஆகவே
கவனமாயிருங்கள்..
குழுப்புகைப்படம்
எடுக்கும்போது



எப்படிச் செயற்கைச் சிரிப்பைச்
சிந்தி விட்டுக் காத்திருக்கிறீர்களோ
அதே போல்...
கண்ணிமைகளிலும் கவனம். 

        - முனைவர். ச. மகாதேவன்


               நகரம் நோக்கி நகர்...

புறவழிச் சாலையோரங்களில்
புலம் பெயருங்கள்
இடை நில்லாப் பேருந்துகளில் இனி
கிராமத்தாருக்கு இடமில்லை
நகரத்தை விட்டு நாலுமைல்

தொலைவில் உள்ளீர்களாம்
விரைவஞ்சல் நிறுவனங்கள்
கடிதப் பதிவுகளை ஏற்க மறுக்கின்றன.
பள்ளிக் கூடத்திற்குப் பாவம்
பிள்ளைகள்
பத்துக் கிலோமீட்டர் அலைகிறார்கள்
சாராயக் கடைகள் மட்டும்
சந்துக்கு இரண்டுண்டு
இனி
உங்கள் கிராமத்தை
நகரத்திற்கருகே
நகர்த்துவதைத் தவிர
வேறு வழியில்லை...
  - முனைவர். ச. மகாதேவன்


             இசை நாற்காலிகள்

பதிவு செய்து வைத்த
இசை ஒலிக்கிறது...
இருபது பேர் சுற்றிச் சுற்றி வருகிறோம்
நாற்காலிகள்
நான்கு மட்டுமே.

கால்கள் விலகி விலகி நடந்தாலும்
கண்கள் இசைக்கருவியை இயக்குபவனையே
கவனமாகப் பார்த்து
மீள்கின்றன
யாரும் எதிர்பாராத நிமிடத்தில்
இசையை அவன் நிறுத்துவதும்
மீண்டும் ஒலிக்க வைப்பதும்
தொடர்கிறது...

ஒரு வினாடி...
இருப்பை மறந்து
இசையில் திளைக்கிறேன்
நாற்காலி ஒன்றும் காலியில்லை...
வெளியேற்றப்படுகிறேன்.

இசையில் இலயிப்பவனால்
நிறுத்தலைப் புரியமுடியாது

நாற்காலிகளில் மட்டுமே
கவனமாயிருப்பவனுக்குக்
காதுகள் இருப்பதற்கான
சாத்தியம் ஏதுமில்லை...

இசைத்தலும் ரசித்தலும்
நாற்காலியைச் சுற்றி
நாற்காலியைப் பற்ற
ஓடுகிறவனுக்கு
இருத்தலுக்கான நியாயமில்லை.

எனவே ஓடாதிருத்தலை மட்டுமே
இனி நான் செய்ய முடியும்
   
    - முனைவர். ச. மகாதேவன்


               அஞ்சலிச் சுவரொட்டிகள்...


சமீபகாலமாய்
சுக துக்கங்கள் யாவற்றையும்
சுவரொட்டிகளின் வழியே
சொல்லத் தொடங்கி விட்டோம்...
இரட்டைக் கண்களில்
கண்ணீர்த் துளிகள்
வழியும் புள்ளியில்
கறுப்பு மலர்களின் பின்னணியில்
சுவரொட்டிகளில் அவ்வப்போது
கண்ணீர் அஞ்சலிகள்


மழையில் நனைந்து

வெயிலில் வெளுது
ஆறு மாதங்களுக்கு முந்தைய
அஞ்சலிச் சுவரொட்டிகளையும்
அவ்வப்போது காண்கிறேன்

அதுசரி...
என் கண்ணீரையும்
என் அஞ்சலியையும்
ஊருக்கு நான் ஏன்
பிரகடனப்படுத்த வேண்டும்?

தனிமைத் தவத்தின்
வருத்த வரம்தானே
கண்ணீர்!
  - முனைவர். ச. மகாதேவன்


                திணரும் வேலி

வழிக்போக்கர்கள் வந்தமரும்
திருநெல்வேலி வளவுவீட்டுத் திண்ணைகள்
இடிக்கப்படுகின்றன
வாகனம் நிறுத்த வசதியில்லையாம்.

திருச்செந்தூர் நடைப்பயணம்
மேற்கொள்பவர்களுக்கு அள்ளியள்ளி
அன்னமிட்ட விஜயராகவ முதலியார் சத்திரத்தில்
சிமெண்ட் மூட்டைகள்
விற்பனையாகின்றன.


வண்ணார்பேட்டை
ஞானமணியம்மாள் சத்திரம்
வாகனப் பழுது நீக்கமாக மாறி ஒரு யுகம்
கழிந்துவிட்டது.

மங்கம்மா சாலைகளில்
மாடிவீடுகள் கிளம்பி விட்டன

புதுமைப்பித்தனின்
காலனும் மருதாயிக் கிழவியும்
உலவிய
பேயடிப்பதாய் மக்கள் பயப்படும்
வெள்ளைக்கோயில்


சுடுகாட்டுக்கருகே சென்ட் இரண்டு
லட்சத்திற்கும் இடமில்லை.

சாலையோரத்து மருத மரங்களை
மின்சார ரம்பத்தால்
மொட்டையடித்தாயிற்று..

தாமிரபரணியை உறிஞ்சித்
தனியார் பாட்டியலில்
விற்றாகி விட்டது;

சுலோசன முதலியார் பாலத்தைத்
தொலைபேசி வட இணைப்பிற்காக
நூறுமுறை உடைத்தாகிவிட்டது;
மிச்சமிருப்பது
அல்வா மட்டும்தான்!
அதையும் கொடுத்துவிடலாமே!

               - முனைவர். ச. மகாதேவன்

             அஞ்சல் அடையாளம்...

கடிதங்களற்ற வாழ்க்கை
கழுத்தை இழந்த முண்டங்களாவே
எனக்குத் தெரிகிறது.

அஞ்சலட்டைகளில் இலக்கியம் படைத்துவரும்
தி.க.சி. யைப் போல
அச்சடித்தது போல்
ஆயிரமாயிரம் கடிதங்கள் எழுதிய
வல்லி்க் கண்ணனைப் போலப்
புதுச்சேரியிலிருந்து கிண்டலாய் எழுதும்
கி.ரா. போல் கடித இலக்கியங்கள் படைக்க
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை...
உண்மை! இது வெறும் புகழ்ச்சியில்லை

கருமை மை பூசப்பட்ட
கருமாதிக் கடிதங்களின்
மரண அடர்த்தியை
எந்த மின்னஞ்சல் செய்து
தந்து விடும்?

“வாகா எல்லையிலிருந்து
மிலிட்டரிக்கார மருதையா
தன் மனைவிக்கு ஆசையாய் ரகசியமாய்
எழுதிய இன்லண்ட் கடிதங்கள்
இன்னொரு இன்பத்துப் பாலாயிற்றே!

அடிப்பூர அழைப்பிதழோடு
அம்பாளின் குங்குமப் பிரசாதத்துடன்
திருவில்லிபுத்தூரிலிருந்து வந்த
ஐந்து ரூபாய் கவர் தந்த நிம்மதி கொஞ்சமா?

ஒரு மணியாகி விட்டால்
தபால்கார செல்வராஜ் அண்ணாச்சியைக்
கண்கள் தேடுகின்றன
கடிதம் ஏதும் எனக்கு வராததால்
தலைகவிழ்ந்தபடி
சைக்கிளை உருட்டிக் கொண்டு
அடுத்த வீட்டுக்கு
அவசரமாய் அவர் நகர்கிறார்.
                - முனைவர். ச. மகாதேவன்


             பழங்களும் நாங்களும்...

விரைவாக அழுகிவிடக் கூடாதென
மெழுகிடப்பட்ட ஆஸ்திரேலிய
ஆப்பிள்களைப் போல
மனிதர்களின் தோல்களுக்கும்
நாளை மருந்திடப்படலாம்

பார்த்தவுடன் பரவசத்தை ஏற்படுத்தும்

ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட
வாஷிங்டன் ஆரஞ்சுகளைப்போல நாளை
மனிதர்கள் வரிசையில் நிறுத்தப்பட்டு
நெற்றியில் இரகசியக் குறியீடுகளுடன்
அடையாள ஸ்டிக்கர்கள் ஒட்டப்படலாம்.

விதையில்லாத் திராட்சைகளைப் போல
மனிதர்களை மாற்ற
விபரீத விஞ்ஞானம் முயலலாம்.

அழுகிய பழங்களை
அள்ளிப் போட்டு அரைத்துப்
பழக் கூழ் தயாரிக்கிறமாதிரி
மனிதர்களை அரைத்து
எலும்புக் கட்டடங்கள்
எழுப்பப்படலாம்.

என்ன செய்தாலென்ன?
எவர் எதிர்த்துக்
கேட்கப் போகிறார்கள்?
        - முனைவர். ச. மகாதேவன்

Blog Archive