மனித மாற்றம்
 


எப்படி முடிகிறது
இந்தக் குழந்தைகளால்…?
பொம்மைகளோடும்
உண்மையாய் பேசி
விளையாட முடிகிறது
நாவின் சப்தங்களிலேறிக்
குரலாலேயேக் குதிரையோட்ட முடிகிறது.

தோன்றும் போதெல்லாம்
துணையின்றி அழமுடிகிறது
தெய்வத்தோடு சிரித்துக் கொஞ்ச முடிகிறது

”உம்மாச்சி… மம்மு…” என்று
அகராதியைக் கடந்து
சொல்லின் பொருளைச்
செறிவாக்க முடிகிறது

தோத்தோவின் தோழனாக முடிகிறது

மிட்டாய்களோடு திருப்தியடைய முடிகிறது
உடைகளற்றுத் தத்தித் தத்தி நடந்து
ஊர்வலம் போக முடிகிறது

பிஞ்சுத் தொடுதல்களால்
மரப்பாச்சிகளுக்கு உயிரூட்ட முடிகிறது.
 
உள்ளொன்று வைத்துப் புறமொன்று
பேசாமல் உள்ளபடி பேசமுடிகிறது
மொத்தத்தில்
மனிதனாகவே
மாறி வாழ முடிகிறது.
அது சரி….
குழந்தையாகவே
அது இருக்கலாமோ?

                             - முனைவர். ச. மகாதேவன்