விரைகின்றன விரல்கள்...

குண்டு குண்டாய்
லட்டு லட்டாய்
கண்ணில் ஒத்திக் கொள்ளும் படியான
எழுத்துக்கள்
மனிதர்களின் காலச்சுவடுகள்

தலைப் பொங்கலுக்குத்
தங்கச்சிக்குச் சீர்தர வேண்டி
ஆண்டி நாடார் பாத்திரக்கடையில் எடுத்த
பித்தளைப் பானையில்
அவளது பெயரைக் கை வெட்டில்
முத்து முத்தாய் எழுதித் தந்த
லோகு அண்ணாச்சியின்
கையழகை அதன் பின்
பல பாத்திரங்களில் எந்திரத்தால்
வெட்டப்பட்ட எழுத்துக்களில் ஏன் இல்லை?

சமாதானபுரச் சிற்பக் கலைக் கூடத்தில்



கைவெட்டால் கல்லெழுத்து எழுதிய அழகை
இன்று
கிரானைட் பலகையின் மீது
இறந்த மனிதரின் படத்துடன்
தரும் கணினித் தொழில் நுட்பத்தால்
ஏன் தர முடியவில்லை?

மின்னஞ்சலும், குறுஞ்செய்திகளும்
எழுத்தின் கழுத்தை
என்றைக்கோ
திருகிப் போட்டுவிட்டன
இப்போது
கோபாலசாமி கோவிலுக்குள் போனால்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட
கல்வெட்டுக்களைத் தேடி விரைகின்றன
என் விரல்கள்.
   - முனைவர். ச. மகாதேவன்