1997 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ. கமல்ஹாசன் அவர்கள் நடத்திய கட்டுரைப் போட்டியில்மாநில அளவில் முதலிடம் பெற்ற கட்டுரை

         ”மெல்லத் தமிழ் இனி...
       பாசத்திற்குரிய பாரதிக்கு,


தமிளில் பெயிலாகிப் போன தமிளுவேந்தன் எழுதுவது. நீ நளமா? நான் நளமா இல்லை! உன் மேல் என்றைக்குமே எங்களுக்குத் தீரா வெறியுண்டு.  மெல்லத் தமிழ் இனிச் சாகும் என்று, பேதைக்குரலில் பெரிதாகச் சொன்னாயே… உன் வார்த்தைகளுக்கு நாங்கள் வாழ்க்கைக் கொடுத்துவிட்டோம்.
    சந்தக் கவியெடுத்து, செந்தமிழை அதில் குழைத்து மந்தத் தமிழினனத்தை மந்திரிக்க வந்த தமிழ், இன்று சீழ்பிடித்து, அயல் மொழியின் கால்பிடித்து மயானத்தை நோக்கி மாட்டு வண்டியில் போய்கொண்டிருக்கிறது! கவிஞர் பட்டங்களோ இன்றைக்குக் காசுக்குக் கிடைக்கின்றன, முனைவர் பட்டங்களோ மூர் மார்க்கெட்டில் விற்கின்றன.  கடைகளில் சிலேபி விற்கும் அளவுக்குகூடச் சிலப்பதிகாரம் விற்க மறுக்கிறது. 
அதோ பார், பாரதி! ஓடம் முழுக்க ஓட்டைகளோடு, காலங்கையின் கடைசிப் பயணயாய் நம் தமிழ், காரணம்... உம் நேசமிகு நெட்டை நெடுமரங்கள்...
    தேன் தமிழில் பேசினால் ஏன் தமிழில் பேசினாயென்று சண்டைக்கு வரும் கூட்டம் ஒருபுறம், துவிச்சக்கரவண்டியேறித் தொல்காப்பியத் தோட்டத்தில் தொடரோட்டம் நடத்துச் சொல்லும் கூட்டம் மறுபுறம். இடையில் ஊமை நாடகத்தின் உலவும் பாத்திரமாய் உன் உன்னதத் தமிழன்னை.
    தமிழ்ப்பள்ளிகளில் தலைநிமிர்ந்து நிற்பதை விட, கான்வெண்டுகளில் கம்பி எண்ணுவதைத்தான் கவுரமாய் நினைப்பவர்கள் நாம் என்பதாலோ என்னவோ, ”அய்யா” என்ற அழைப்புக் கூட அவமதிப்பாக அங்கீகரிக்கப்பட்டு விட்டது.
நெஞ்சு பொறுக்குதிலையே
    பப்பாளிப் பாலெடுத்துப் பால்கோவா கிண்டச் சொல்லி ஸ்டார் டி.வி. யில் அந்நியர் யாராவது ஆங்கிலத்தில் சொன்னால், உண்டு பார்த்துவிட்டு, உன்னதச் சுவையென்று தலையை ஆட்டும்போது நம் சுயங்கள், மலடாகிப் போனதை மறுக்க முடியாது.
    சான்பிரான்சிஸ்கோவிலிருந்து சாணியை இறக்குமதி செய்து வந்து, சந்தன மணம் அதில் சார்ந்திருப்பதாய்ச் சாதிக்கும் இவர்களுக்குத் தாய்மொழி என்பது தரங்குறைந்த ஒன்றுதான்.
    ஒன்றைரை வரிகளில் உலகளந்த திருக்குறளும், சிந்தனை தரும் சிலம்பும், மேலான மதிப்பீடுகள் தந்த மேகலையும், சீவகனார் வளம்பாடும் சிந்தாமணியும், சங்க இலக்கியத்தின் பத்து எட்டொடு குண்டலகேசியும் சொல்லாததையா வேறு உலகஇலக்கியங்கள் விளக்கி விடப் போகின்றன? மற்ற துறைகளை வாழ்க்கைக்குப் படிக்கிறோம் என்றால் தமிழில் வாழ்க்கையைப் படிக்கிறோம்.
    ஒவ்வொருவரும் தங்கள் கடிகாரம் காட்டும் நேரமே சரியென்று சாதிப்பதைப்போல அந்தந்த மொழியினர், தத்தம் தாய் மொழியை முன்னிறுத்திப் பிடிப்பது வழக்கம்;  நம் தமிழைத் தவிர! தாய் மொழியினால் மட்டுந்தான் எவராலுமே சிந்திக்க முடியும்.  தாகூரின் கீதாஞ்சலி நோபல் பரிசு பெற்றதென்றால், அவரின் “சிந்திப்பு மூலம்” வங்கமொழி!  எழுத்தாளர் தோப்பில் மும்மது மீரான் தன் நாவல்களைத் தனக்கு நன்கு பரிச்சயமான மலையாளத்தில் சிந்தித்து, பின் அதைத் தமிழ்ப்படுத்துகின்றாராம்.
ஆனால் நம் கல்வி முறையில் நடப்பதென்ன? எல்.கே.ஜி. முதல் எம்.பி.பி.எஸ். வரை தமிழின் “அ“ கரத்தைக்கூட அறியாமலே தமிழ்நாட்டில் பட்டம் வாங்கி விட முடிகிறது.  ஒன்றுமே புரியாத பிஞ்சு வயதில் “நர்சரி நரகங்களில்“ அவர்களை நட்டு ஆங்கிலஅமிலத்தை அள்ளி ஊற்றும்போது கல்வி கற்பதே அதற்குக் கசப்பாகப் பதிந்து விடுகிறது.
இனி பொறுப்பதில்லை
    திருமண வீட்டில் உணவு உண்ணப் பந்தியில் அமரும்போது, சாதம், சாம்பார், ரசம், பாயசம், மோர் எனத் தனியே முறையாக உண்ணும் நாம், மொழியில் மட்டும் கூட்டாஞ் சோறுகளையே கூடுமானவரை கலக்கிறோம் என்பது கண்களில் கந்தக அமிலத்தை ஊற்றுவதை விடக் கொடுமையான செய்தி.
Pass பண்ணி Study பண்ணி Start பண்ணி, எனத் தமிழைப் பேசிக் கொண்டிருக்கும் போது தமிழ் வாழவா செய்யும்?  தான் இறந்தபின் தன் கல்லறையில், ”இங்கே தமிழ் மாணவன் உறங்குகிறான்” என்று எழுதுங்கள், என்று அயல்நாட்டுப் பாதிரியார் ஜீ.யூ.போப்பையர் மதி்த்த தமிழுக்கு, தெவசம் வைக்க இன்று தேதி குறிக்கிறோம்.  தமிழில் பெயர் வைத்தாலும் ஆங்கிலத்தில் தலையெழுத்துக்கள், ஓர் ஆங்கில நூலில் ச. MAHADEVAN என எழுதினால், தோலை உரித்து அவர்கள் தோல் பை செய்து விடுவார்கள்.  ஆனால் நாம்?
    ”பொந்தி சேரி – பாண்டிச்சேரி எனும் பெயர் அடிமையின் அடையாளம், எனவே புதுச்சேரி ஆக்குவோம் என மாற்றி நான்கு வருடமானபின்தான் தமிழ்நாடு MADRAS, சென்னையாக மாறுகிறது.  அரசு ஆணை பிறப்பித்த பின்னும் விமான நிலையங்களில் இன்னமும் ’மெட்ராஸ்’ என அழைக்க முடிகிறதென்றால் தமிழ் இனி வாழவா செய்யும்?
ALL INDIA RADIOவை அகில இந்திய வானொலியாக்கி விட்டோம் என ஒரு கூட்டம் சப்தம் போடும் அதே நேரம் டெல்லி தமிழ்ச் செய்தியறிக்கையில் ”ஆஷாஷ்வாணி… செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண் சுவாமி” என ஒலிக்கும்போது தமிழுக்கு, வாழும் வாய்ப்பு உண்டா என்ன?
இலக்கிய இடறல்கள்
    கேரளாவில் போய் “உங்கள் ஒப்பற்ற எழுத்தாளர் யார்?” என்றால் எந்தவித எதிர்க் கருத்துமின்றி எம்.டி. வாசுதேவன் நாயரையோ, பிறரையோ சொல்வார்கள்.  ஆனால் தமிழகத்தில்? ஊருக்கு ஒருவரைச் சொல்லி, கடைசியில் எவருமே இல்லை என்பார்கள்.  கோடிப் படைப்பாளிகளுக்குள் பல்லாயிரம் பிரிவினைகள்.  விளைவு  இலக்கியம் இடறலில்.
    கரன்ஸிக்காரர்களின் வியர்வைக்கு வெண்பா எழுவதும், ஹார்லிக்ஸை சோளநக்கியாக்கி, குளுக்கோஸைப் பருச்சருக்கரையாக மொழிமாற்றம் செய்யவும், முக்கல் முனகல்களின் இசைப்பள்ளங்களில் வார்த்தையை அள்ளிப் போட்டு நிரப்பும் ஆபாச வாகனமாயும் தமிழை மாற்றியபின் ’இலக்கியத்தமிழ்’ வாழவா செய்யும்?
இதயத்துடிப்பு நின்றுபோன இசைத்தமிழ்
    மாசில் வீணை வைத்து, மாலை மதியமும் பூண்டு, தேவாரப் பண்ணென்றும், தெவிட்டா நல்பாட்டென்றும், பூவாரமணம் பெற்ற புனிதஇசைத்தமிழ், இதயம் கிழிபட்டு இரணமாகிக் கிடக்கிறது. ”தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்” என்று அப்பரால் சப்பரத்தில் ஏற்றப்பட்ட சந்தத்தமிழ் சலுகைப் பருக்கைகளுக்காக இன்றைக்கு மொழிக்கலப்பில் மாட்டிக்கொண்டிருக்கிறது.   
இசையுலகின் மும்மூர்த்திகளான முத்துசாமி தீட்சிதரும், சியாமா சாஸ்திரியும், தியாகப்பிரம்மமுமான மூவருமே தமிழகத்தில் உதித்தவர்கள்தான்.  ஆந்திர விசயவாடாவின் சபாக்களில் போய் அமர்ந்து 24 மணி நேரமும் தமிழிசை பாடினால் சும்மா விடுவார்களா?  நாட்டுப்புறத் தமிழிசையை மறந்த சமுதாயத்தி்ன் முன் மெல்லத் தமிழ் துளிர்த்து விட முடியுமா?
நலிந்து கொண்டிருக்கும் நாடகத் தமிழ்
    நாடகத்துக்கே இலக்கணம் வகுத்து, சிலப்பதிகாரம் பேசிய சீர்மிகுகாலம் மாறி, காரை பெயர்ந்த கட்டிடமாய், வேரை இழந்த விருட்சமாய் தமிழ் நாடகங்கள் அழிவை நோக்கி அடியெடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றன.
    “How are you Bala? I am fine ya!” You became mad Ya... why? Because you are my friend.  இது மிகப்பிரபலமான தமிழ் நாடக கர்த்தாவின் தமிழ் நாடகத் தொடக்கம்... நிச்சயம் தமிழ் வாழும் தானே!
மனதில் உறுதி வேண்டும்...!
    ஓடு ஒழுகுவதைக் காரணம் காட்டி, வீட்டை விற்றுவிட்டுப் போய் விட முடியாது.  க்யூ வரிசையிலும், கேட்டுவாசலிலும், நடு சென்டரிலும் ”தமிங்கிலிஷ்,” படித்த நம் மனப்பான்மை மாற வேண்டும். ”சுத்தத் தமிழைப் பேசுங்கள்!” என்று சொல்ல வரவில்லை.  பேசும் தமிழைச் சுத்தமாகப் பேசுவோம் என்பதே என் அழைப்பு.
    தமிழ் என்றாலேயே கோவலன், கண்ணகி என்று பதிக்கப்பட்ட மதிப்பீடுகளை உடைத்தெறிய வேண்டும்.  எந்தத் துறைக்குமே சளைக்காத வகையில் தமிழும் நவீனத்தோடு கைக்கோர்த்து ஆண்டுகள் பலவாகி விட்டன.  அதையெல்லாம் தமிழறிஞர் ஏற்றுக்கொண்டு பிறருக்கும் அறிவித்தாக வேண்டும்.  அதற்கு விவாதங்களை முன்நிறுத்த வேண்டியது அவசியம்.   
    தூய வெண்துணியில் எந்த நிறத்தை ஏற்றினாலும், அது அதுவாகவே மாறிவிடும்.  ”இணையம்” வந்துவிட்ட நேரத்திலும் இலக்கணக் குறிப்புகளைப் பற்றியே ஆய்வுகள் நடந்து கொண்டிருந்தால், காலப்பேருந்து நம் காலில் ஏறிவிடும்.  தன் பிள்ளை என்பதற்காகக் காலக்முழுக்கக்  கக்கத்திலேயே தூக்கித் திரிந்தால் வளர்ச்சி என்பது வரப்போவதில்லை.
    சீக்குப்பிடித்த சிந்தனையை விட்டு விட்டுப், புதுமையைச் சிநேகத்தோடு வரவேற்போம்.  லேசரில் அச்சடிப்பதால், கம்பராமாயணமொன்றும் களங்கமாகி விடப் போவதில்லை.  முதலில் நம் தாய்மொழியை நாம் மதிப்போம்.  பின் உலகம் நம்மை மதிக்கும்.  அப்போது மெல்லத் தமிழினி வாழும் அந்த மேற்குமொழிகள் தனி புவிமிசை மாளும் ”பாரதி! உழவாரம் தூக்கிய அப்பர் மாதிரி, உறுதியைத் தூக்கிப் புறப்படுகிறோம்.
    காரணம்... உன்னைப் போல நானும், தாமிரபரணியின் தண்ணீர் குடிப்பவன்.
    எனது முதல் குறி அவன்தான்... அதோ பார்...
    அவன் பாடுவதை,
   

      ”தீராத விளையாட்டுப் பில்லை... கண்ணன்.
        தெருவிளே பெண்களுக்கோயாத தொள்ளை”

 
    ”இந்தியன்” தாத்தாவாக எழுகிறோம்... தமிழின் தலைகுனிவு நீக்க!


                                                                                        என்றும் அன்புடன்
                           தமிழ் வேந்தனாக

                      சவுந்தர மகாதேவன்,
                          பாளையங்கோட்டை.
 

                 கம்பீரம்


கம்பீர சிங்கமாய் நாம் உள்ளபோது
சிலந்தி வளைக்குள்ளா
சிறைப்பட்டு கிடப்பது


           முனைவர்.ச.மகாதேவன்

                பொழிவு

ஒலி வங்கியின்
சத்தமல்ல
பேச்சு
ருத்திரத்தின் யுத்தமே
பேச்சு


         முனைவர்.ச.மகாதேவன்

                                                                ரசி



யானை லத்தியை மிதித்தாயென்றல்
காலில் முள்குத்தாதென்றாய்
மிதித்தேன்.


யானை வால்முடியை வளைத்துக்
கைக்காப்புபோட்டால்
சீர்தட்டாதென்றாய

 போட்டேன்.


 வீட்டுவாசலில் ஆசிதர வந்துநிற்கிற
 யானை முன்
 வாளி நீரோடு போய்
அள்ளித் தெளித்துக் கொண்டால்
முகம் தெளிச்சியாயிருக்குமென்றாய்
செய்தேன்.

ஒரு ருபாய் தந்தால் காஜமுகனின்

ஆசி கிடைக்குமென்றய்
பெற்றேன்.

எப்போதாவது சொன்னாயா

யானை வந்தால்
ரசியென்று.........

                          -Dr.S. மகாதேவன்

                நம்பாமல்


தாமிரபரணிக்கு அருகிலும்
தண்ணீர்க் குழிகள்...
நதியை நம்பாமல்

   முனைவர்.ச.மகாதேவன்

மரத்தடியில்...........

 இளநீர்க்காய்களை
இழந்து விட்டுக்
கோலாக்கள் மீதே
நீங்கள் குடியிருப்பீர்கள் என்பதால்
மாப்பிள்ளை விநாயகர்கள்
எல்லாம்
மரத்தடிக்குப்
போய்விட்டர்கள்

                                       முனைவர்.ச.மகாதேவன்

                     மரத்த மனம்




பொன்னமராவதி
பெருநாவலர்
மரக்கடைக்கருகில்
சவ ஊர்வலம் நடந்தபோது
பார்க்கப் பயந்துபோய்
திரும்பிய விநாடிகள்

சாலை முழுக்க

ஊர்வலம் போன
சுவடுகளின் சாட்சியாய்
மஞ்சள்

  மரண மலர்கள்!

 

இப்போது
குழந்தை கொல்லப்பட்ட
கொலைக் காட்சியைத்
தொலைக்காட்சியில்
பார்த்தாலும்
பாப்கானை அள்ளி
பல்லில் அரைத்துத்தள்ள முடிகிறது.

              
                                           

                         முனைவர் ச. மகாதேவன்

                 நன்றி
 

ஏறிய ஏணிகளை
ஏளனம் செய்பவன்
கூரிய கண்ணாடிச் சில்லைவிடக்
கொடூரமானவன்
        
                                     முனைவர்.ச.மகாதேவன்

        சிதலமான சின்ன விரல்கள்



வேனிற்கால வெப்பப் பொழுதுகளில்
இலைகளை இழந்துவிட்டு
மொட்டையாய் முனகுகிற
மரங்களைப் பார்க்கும் போதெல்லாம்
மாரடைப்பு வருகிறது
உங்களின்
சின்ன விரல்களைச்
சிதலமாக்கிய
காலன் யார்?
கேள்வி
எதிரே பார்த்ததும்
ஏனிந்தக் கேள்வி?
இவரைப் பார்த்தால்
இதனைக் கேட்போமென
எவரைப் பார்த்தாலும்
அதே கேள்விகள்!
அச்சிட்ட விண்ணப்பப் படிவம் மாதிரி
அலுக்காத அதே கேள்விகள்
”நல்லா இருக்கீங்களா?”
கேட்க வேண்டுமே
என்பதற்காகக் கேட்டானேயொழிய
உள்ளமொன்றிக் கேட்கவில்லை
அப்படி நானும் கேட்டிருப்பேனே
ஆறெழு சமயங்களில்.....

                        முனைவர்.ச.மகாதேவன்

                  நான்


ஓடம் முழுக்க
ஓட்டைகளோடு
கால கங்கையின்
கடைசிப் பயணியாய்
என்னை இழந்து
என்னுள் இழந்து
எதையோ தேடும்
நான் . . .

                                   முனைவர்.ச.மகாதேவன்

                     பாவப்பசி



கோட்ஸேக்களின்
கோரப்பசிக்கு
மகாத்மாக்களை
மரண விருந்தாக்கினோம்

 
                                     முனைவர்.ச.மகாதேவன்

               விழி . . .  எழு . . . 




இரண்டு சூரியன்களை
இமைக்குள்ளே இருத்திக் கொண்டு
இருளில் இருப்பதாய்
இனியும் சொல்லலாமா?



         முனைவர்.ச.மகாதேவன்



                  வதம்



பத்தாம் தசராக்களின்
ராவுகளில்
உக்கிரம் தணியாத உச்சினிமாகாளிகள்
இன்னமும்
மிகிஷாசூரங்களோடு
மல்லுக்கு நிற்கத்தான் வேண்டியிருக்கிறது

                 
          முனைவர்.ச.மகாதேவன்

                பத்திரமாய்

நகரப் பேருந்து நெரிசலில்
நடத்துநர் தந்த நாலுரூபா பயணச்சீட்டை
வியர்வை சிந்தும் விரலிடுக்கில்
பத்திரமாய் பாதுகாப்பதைப் போலப்
பலநேரங்களில்
கவனமாயிருக்க வேண்டியிருக்கிறது

பிடிக்காத அலைவரிசையைப்

பிடிவாதமாய் நகர்த்துகிற
ரிமோட்களைப் போலப்
பிடிக்காத மனிதர்களிடமிருந்து
பிடிவாதமாய்
நகரத்தான் வேண்டியிருக்கிறது

கண்ணாடித் தொட்டியின்

செவ்வகப் பரப்புகளில்
அர்த்தம்தெரியாமல்
முட்டி மோதி அலைகிற
அலங்கார மீங்களைப்போல
அர்த்தம் பிடிபடும்வரை

எதற்கும் காத்திருக்கத்தான்

வேண்டியிருக்கிறது
அது அது அது அதன்
உட்பொருளை
உணர்த்தும் வரை!!!!!!!

                                  
                               
                 -முனைவர் ச.மகாதேவன்

                                                      சொத்தவர்


சிதலடைந்த
கல்லறைகளுக்கிடையே
பளிச்சென்றிருந்த
கிரானைட் கல்லறையைப்
பார்த்தவுடன்
தெரிந்து கொண்டேன்
                          செத்தவர்
                         “சொத்தவரென்று“
                             
                              
                    -முனைவர் ச.மகாதேவன்

                 காத்திருப்பு



சவுதிக்குச் சம்பாதிக்கப்போன
மகனின் வரவுக்காய்
குளிர்பதனப் பெட்டிக்குள்
காத்திருக்கிறது
அத் தாயின் பிணம்
விசா கிடைக்காமல்
போகுமோ!!!!
                  
                                  -Dr.S.மகாதேவன்

                                                              மேல்




கிணற்றுத் தவளையாய்
கிடப்பதை விடக்
கடல் ஆமையாய்
காலம் கழிப்பது
எவ்வளவோ மேல்!!!!!!!!



      -முனைவர் 
     ச.மகாதேவன்

                         கவலை


                                            
 ஆயுதத்தோடு ஆசி தந்த
ஆயிரத்தா முதல்
விடிகாலைப் பேட்டையிலிருந்து
வந்த பேராச்சி வரை
விழித்திருந்து பதின்முன்று
தசரா சப்பரங்களைக்
கண்குளிரத் தரிசித்தாகி விட்டது
இப்போது
எனக்கிருக்கும்
ஒரே கவலை
நெற்றியில் பூசியதிருநீறு போக
மிச்சமிருப்பதை
என்ன செய்வது என்பது தான்!!!!
                         
                                                              முனைவர்  ச. மகாதேவன்

                   மேடைப் பொய்கள்
 

உண்மையைச்
சொல்லப் போனால்
நான்
எந்த உன்மையையும்
சொல்லப் போவதில்லை - காரணம்
இது மேடை!
 



                                                                                 
ஒலி வாங்கியின்
ஒப்பாரி ஒலத்தில்
கருத்துக்கள்
மெல்லக்
கதவடைத்துக் கொண்டன.
                            
                                
                    முனைவர்  ச. மகாதேவன்

                      அந்த நாட்கள்



பனையோலைப் பெட்டியில்
கொச்சக் கயிறு பிடித்துத்
துக்கிப் போன
உடன்குடிக் கருப்பட்டிச் சிப்பங்கள் - இன்று
வண்ணார்ப்பேட்டைப் பேரங்காடியின்
அச்சடித்த பிளாஸ்டிக்  பைக்குள்
நியான் விளக்கு ஒளிவெள்ளத்தில்..



சாத்தூர்க் கடைத் தெருவில்
செட்டியார் கடை மண்பானைக்
குளிர்ச்சியில் சிரட்டை அகப்பையோடு
மிதந்த எண்ணெய் - இன்று
பாலிதீன் பாதுகாப்பில்
இலவச எள் பாக்கெட்டோடு

வீராபுரத்து வில்வண்டிகளில்

கம்பித் தடுப்பில்
கைகளை வைத்தபடி
சாலைகளை மெதுவாய்
ரசித்த குழந்தைகள் - இன்று
ஆட்டோ நசுங்கல்களில்
அடைபட்டு விரைகின்றன

 

இருப்பதை விட
இழந்தது
இனிக்கிறது
 

             -Dr.S. மகாதேவன்


--மிட்டாய்கள்-- 
பள்ளி நாட்களில் 
பல்லை உடைத்த 
கல்கோனா மிட்டாய்கள்

அந்தோனியார் பள்ளியில் 
அஞ்சாப்புப் படிக்கையில்
அந்தோனி தந்த சூடன் மிட்டாய்கள்

கதிட்ரல் பள்ளி வாசலில்
தேன் உள்ளதென்று 
வாங்கித் தின்ற தேன் மிட்டாய்கள்

பத்தாப்பு தேர்வு எழுத 
சேவியர் பள்ளிக்குப் போன போது  
வாங்கித் தின்ற ஜீவஜோதி   மிட்டாய்கள்

தசரா இரவில் 
பாளை சவகர் மைதானத்தில்
சப்பரம் பார்க்க போன போது\
ஆச்சி வாங்கித் தந்த தேங்காய் மிட்டாய்கள்

பதினெட்டாம் பெருக்கன்று
பேராச்சி அம்மன் கோவில் வாசலில்
வாங்கித் தின்ற சவ் மிட்டாய்கள்

இன்று
தின்றவனின் 
மண்டை சிதறுவதாய் காட்டப்படும் 
மண்ணாங்கட்டி மிட்டாய்களைக்  
கண்டால் பற்றி எரிகிறது    


                                    



நில்
கவனி
செல் பேசாமல்
செல் !

                       வலி 
கடப்பாறைகளுக்குத்
தெரியாது
தளிர்களின்
வலி
                              முனைவர்  ச. மகாதேவன்

 சீரியல்களுக்கும்
வாரியல்களுக்கும்
ஒற்றுமை உண்டு ...
இரண்டும்
குப்பைகளைக்
கூட்டுகின்றன .

 பாத்திரம் அறிந்து பிச்சை இடு
என்றாயே !
அவனிடம் பிளாஸ்டிக் கவர்
கூட இல்லையே...
எதில் இடுவது ?

காற்றுள்ள போதே
தூற்றிக்கொள்
கரண்டுள்ள போதே
தூங்கிக்கொள்


மரணக் கிணற்றில்
ஏழாவது காட்சியில்
அசுர வேகத்தில்
பைக் ஓட்டுகிற
சாகசக்காரனின்
கவனம்
சம்பளம் தருகின்ற
முதலாளியின் முகத்தில்

இருக்கும் போது
எருக்கம்பூக் கூடத்
தரவில்லை
மரித்தபின்
மலர்வளைய
மரியாதைகள்.

Blog Archive