அணிலாடு முன்றில்

 மலையான் ஊரணிக்கருகேயிருக்கும்
நாகி ஆச்சி வீட்டு முற்றத்தில்
கொய்யா மரமுண்டு...
அதில் கொய்யா
கொய்யாக் கனியுண்டு

கல்முகப்பிலமர்ந்து
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

வழுவழுப்பான மரத்திலிருந்து
அங்குமிங்கும் பார்த்தபடி
அணில் அந்த முற்றத்தில் இறங்குகிறது

பட்டுக் குஞ்சலத்தையொத்த அழகு வால்
முன்னிரு கரங்கள் ஏந்தி
முன்னிருக்கும்
பழத்தைக் கொறிக்கிறது
அவ்வப்போது
அங்குமிங்கும் மிரட்சிப் பார்வை வீசுகிறது

தடவிக் கொடுப்பதற்கு
இராமர்களுக்குப் பஞ்சமோ என்னவோ
நம் பக்கத்தில் வரவே பயப்படுகிறது

ஆச்சியின் அழைப்பிற்குத் திரும்பினேன்
பூனையின் வாயில்
அணில் மாட்டித் துடித்தது.

அதன்பின்பு
அணிலாடா அந்த
முன்றிலுக்குப் போக
மனமில்லை
    - முனைவர். ச. மகாதேவன்