நகரப் பேருந்தில் நெல்லையப்பர் கோவிலுக்குப்
பயணிக்கும்போது பார்த்த
சாலையோரத்துத் தெரஸா ஓவியம்!
முகச் சுருக்கங்களோடு கருணை பொங்கிய
அன்னையின் ரங்கோலி உருவத்தின் மேல்
காசுகள் ஏற்படுத்திய காயங்கள்..
பார்க்கப் பரிதாபமானது.

பின்னணியை விட்டுயர்ந்து
முப்பரிமாண பிம்பமாய்
பேசுகிறது அச்சாலையோரத்து ஓவியம்

தூரிகைளால் வரையப் படாத
அவ்வுயிர் ஓவியத்தைச் சுற்றிக்
கூட்டம் கூட்டமாய் அப்பாவி ஜனங்கள்

கடந்த வாரம் லூர்துநாதன் சிலைக்கருகே
சிலுவையில் ஏசுநாதர் ரத்தம் சிந்திய
ஓவியத்தை உள்ளுக்குள் ரத்தம் சிந்த அவன்
வரைந்து முடித்து விட்டுக்
கல்மீது குத்தவைத்துக் காத்திருந்தான்.

வீசியெறியப்பட்ட காசுகள் ஏற்படுத்திய
காயங்கள் வலிமையாயிருந்த காரணத்தால்
அவன்
அதன்பிறகு எந்த ஓவியத்தையும்
வரையவே இல்லை.

இப்போது
சுலோசன முதலியார் பாலநடைபாதையில்
சுருண்டு கிடக்கிறான்
முடிந்தால் யாராகிலும்
அக் காட்சியை வரையலாம்.
அதையும் காசுகள் காயப்படுத்தலாம்.