யாம நிலா
ஈராயிரமாண்டுப் பழமையான
கோவிலை மேலும் செறிவாக்க
அங்குமிங்கும் பறக்கிற வவ்வால்களைப் போலப்
பயணச் சிற்றுண்டிகள்
நம் பயணங்களைச் செறிவாக்குகின்றன.

திருநெல்வேலி அல்வாக்களும்
சாத்தூர் வெள்ளரிப் பிஞ்சுகளும்
கோவில்பட்டி கடலைமிட்டாய்களும்
கடம்பூர் போளிகளும்
திண்டுக்கல் கொடை ஆரஞ்சுகளும்
மணப்பாறை முறுக்குகளும்
நம் இரயில் பயணங்களை
இரசித்தலுக்குள்ளாக்கின.

அன்பின் கண்களில் பார்க்கும்போது
யாமம் கூடப் பேரழகுதான்.
யாம நிலாவும் ஓரழகுதான்.

ரசித்தலும் வயிறுநிறையப் புசித்தலும்
கவலையற்று வசித்தலும்தானே வாழ்க்கை!