மண்பெட்டி அடுப்புகளில்
சமையல் செய்வாள் சாரிப்பாட்டி

அடுப்பில் கம்பிக்கோலம் போட்டுப்
பக்கவாட்டிலெல்லாம் சாணியால் மொழுகி
அருள் அன்கோ விறகுச் சுள்ளிகளை
உள்ளே வைத்து ராம நாமத்தோடு
மண்ணெண்ணெய் ஊற்றி… அவள்
அடுப்பைக் கபகபவென எரியச்செய்வதே
அலாதியான காட்சி.
அன்னபூரணயின் பெயரைச் சொல்லி
அரிசியைக் களைந்து
கொதிக்கும் உலையிலிடுவாள்

விறகின் பின்புறம் தைலம் போல்
சிகப்பு நிறத் திரவம் கசிந்து
அடுப்பு சத்தமிட்டு எரியும்போது
பாட்டி சொல்வாள்…
விருந்தினர் யாரோ வரப்போகிறார்களென.

அடுப்பின் மொழியறிந்தவள் அவள்
வருவோர் உண்ணப்
பிடியரிசியை உலையில் போடுவாள் அதிகமாக

இன்று
சத்தமிடும் அடுப்புமில்லை
வருவோருக்கெல்லாம் அள்ளியள்ளி
அன்னமிடும் அவளுமில்லை
அமைதியாகிவிட்டன
அடுப்பும் அடுக்களையும்.