....ஏ) மாற்றம்.......


அம்மி கொத்துகிறவர்களை
இயந்திர அரைப்பான்கள்
அரைத்துக் கரைத்துவிட்டன.

சைனா பஜார் சல்லிசு
குடைகள் வந்த பிறகு
குடை ரிப்போ்காரர்களைப்
பார்க்கவே முடிவதில்லை.

 


கலர் கலராய் நைலான் குடங்கள்
வந்தபின்பு சூட்டுக் கோலோடு
பிளாஸ்டிக் வாளி ஒட்டுகிற
முண்டாசு மனிதர்களைப்
பார்க்க முடிவதில்லை.

அடுக்ககப் பல்பொருள் அங்காடிகளில்
குளிர்பதனப் பெட்டிக்குள்
பாக்கெட் மோர் வைக்கப்பட்ட பின்
மூங்கில் கூடையோடு
சுவற்றில் கோட்டுக் கணக்கெழுதி
மோர் விற்றுப்போன
திம்மராஜபுரம் கிருஷ்ணம்மாவை இப்போது
பார்க்க முடிவதில்லை.

பூ விற்பவன் மட்டும்தான்
எங்கள் பாண்டிய வேளாளர்
தெருவில் அவ்வப்போது
தென்படுகிறான்
அவன் வயிற்றில் எப்போது
அடிக்கப்போகிறோமோ தெரியவில்லை

தொழிலாளர்களைப்
படிப்படியாய் பிச்சைக்காரர்களாக்கும்
வித்தை மட்டும் அருமையாய் நடக்கிறது
                                                        
- முனைவர். ச. மகாதேவன்