மண் காக்க வந்த மகா பாரதியே!

எட்டயபுரத்து எரிமலைப் பாட்டே!
இயங்கிய இதயங்களின் கவிதைத் துடிப்பே!

தூங்கிக் கிடந்த எம்மினத்தைத்
தாங்கிக் கிடந்த அடிமைத்தனத்தைக் கவிதை
டாங்கி கொண்டு நீ சுட்டாய்
“மகாபாரதி“ என இறவாப்புகழ் பெற்றாய்.

பெண்ணியம் பேசிய தமிழ்ப் பெம்மானே – தமிழ்
பண்ணிய உயர் புண்ணியம் நீதானே!
தண்ணிய தமிழை நீ தரணியில் உயர்த்தினாய்
திண்ணிய நெஞ்சத்தோடு நீ பாரதத்தைத் திருத்தினாய்

மதிதா... மதிதா என்று பராசக்தியிடம் பாதம் பணிந்தவனே!
'விதிவா... விதிவா' என உன்னை
விரைந்து அழைத்த போதும்
காலனை உன் காலருகே இட்டு
மிதித்தவனப்பா நீ!

உன் கவிதைக்கண் சிவந்ததால்
இந்த அடிமைமண் சினந்தது

யாப்புக்குள் அடங்கிய வெண்பா
உன்னால் எழுச்சிமிக்க பெண்பாவானது.

நீ இந்திய இருட்டு தீர
சுதந்திர வெளிச்சம் தந்த
கவிதைச் சூரியன்

அந்நியரின் திறவாக் கதவுகளை உடைத்தது
உன் இறவாத் தமிழாயிற்றே!
உதயம் தந்த உன்னதச் சூரியன் என்றாலும்
அஸ்தமனங்கள் உனக்கு என்றுமில்லை 
                                               - முனைவர். ச. மகாதேவன்