புத்தர் ஆசைப்பட்டார்

ஆசைகள் ஏதுமற்ற உயரிய ஆன்மபீடத்தில்
புத்தர் தியானத்திலிருக்கிறார்.
சலனம் ஏதுமற்ற
நிசப்தம் பிரபஞ்சமெங்கும்

அமைதியாயிருந்த அந்த அறைக்குள்ளே
துறுதுறுப்பாய்
குழந்தைகள் உள்நுழைகின்றன...
தலைகீழாக்குகின்றன
அந்த இனிய இல்லத்தை

புத்தரை உறவு சொல்லி அழைக்கிறது
ஒரு குழந்தை
சின்னஞ்சிறு இறகால்
வருடுவிடுகிறது இன்னொன்று
மம்மு சாப்பிடச் சொல்கிறது பிறிதொன்று

இறுக்கத்தைக் கலைத்த புத்தர்
இறங்கி விளையாடத் தொடங்கினார்
புத்த தத்துவமாய் மாறின அக்குழந்தைகள்
அன்றிலிருந்து
ஆசைகள் அவருக்கும் அவசியமாயின