அன்பின் கருவி

வெயில் வந்தால் உற்சாகமாகிவிடுவாள் பாட்டி
மகளின் வரவுக்காய்
மாவடு போட்டுக் காத்திருப்பாள்.

முந்தைய நாளே சவ்வரிசியை ஊறப்போட்டுச்
சூரிய உதயத்தி்ற்கு முன்பே கூழ் வத்தலைக்
காய்ச்சி மொட்டை மாடிக்குப் போயிருப்பாள்

தாத்தா வேட்டி தரையில் விரியும்
சுடச்சுட கூழ் வத்தலைப் பாட்டி கையால் இட்டுக்
கடைசி வரிசை முடிக்கும் போது
சூரியன்
சுள்ளென்று சுடும்.

கருப்புத் துணியைக்
கம்புமேல் கட்டி
காகத்தைத் தடை செய்வாள்.

அடுத்த நாள் விடியலிலும்
அவசரமாய் எழுந்து
வேட்டியின் மறுபுறம்
தண்ணீர் தெளித்து
வற்றலை உத்தெடுப்பாள்

வற்றல் வாணலியில் பொரியும் கணத்தில்
மகள் வந்திருப்பாள்

வெயிலைக் கூட
அன்பின் கருவியாக்கச் சாரிப்
பாட்டியால் மட்டுமே முடியும்
                      - முனைவர். ச. மகாதேவன்