சின்ன பொம்மைகள்


                        திருச்செந்தூர்ச் சாலையோரத்தில்
போலீஸ் துரத்திவிட்டதால்
பிளாஸ்டர் ஆப் பாரீசில்
ஆளுயரப் பிள்ளையாரை அப்படியே போட்டுவிட்டு
ஓடிய ராஜஸ்தான் மாநிலபொம்மைக்
கலைஞன்...
அடி விழுந்தால் அப்புறப்படுத்த முடியா
ஆளுயரப் பொம்மைகளை அன்றிலிருந்து
செய்வதே இல்லை.

அடித்து விரட்டினாலும்
ஆளுக்கொன்றாய் தூக்கிக் கொண்டு
ஓடத் தோதாயிருக்குமெனக்
குட்டிப் பொம்மைகளையே செய்துவிட்டு
விற்குமென வெகுநாட்களாய் காத்திருக்கிறான்.
நாம் பேசாமல் வேடிக்கை பார்த்தபடியே
வழக்கம் போல்
வண்டியில் பலநூறுமுறைக் கடந்து செல்கிறோம்.

                              - முனைவர். ச. மகாதேவன்