பனவிடலிச் சத்திரத்தில்
 பூ விற்பவன்
பூ மூட்டையைப்
பேருந்தில் ஏற்றுகிறான் .
மணத்தை
 மரத்தடியில் விட்டு


சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி 



. என் நினைவுச் சிறகுகளில்
நிறையவே காயங்கள் .
பறக்கும்போது
வலிக்கலாம் .
ஆனாலும்
பறத்தல் குறித்தப்
பயமில்லை .
பறத்தலின்றிப்
பறவையில்லை 


சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி 



தனங்களில் குருதியோடு
காற்று வீசித்
தாலாட்டுகிறாள்
மரமாய் மதிக்கப்படும்
மரத்தாய் .


சௌந்தர மகாதேவன்
திருநெல்வேலி 



வெள்ளையடிப்பு நாட்களில்
ஒட்டடைக் குச்சியால்
 நூலம்படையைச் சுத்தம்
செய்தபோது நாலாபுறமும்
சிதறி ஓடிய சிலந்திகளைப்
பார்க்கும் போதெல்லாம்
மே மாதத்து
மாற்றல் உத்தரவு கண்டு
மூட்டை முடிச்சுகளுடன்
மைசூருக்கும்  நாகாலாந்துக்கும்
ஓடும் பக்கத்து வீட்டு லில்லி அப்பா
காரணமின்றி நினைவுக்கு வருகிறார்
 



இருட்டறைகள் எனக்கு இதமானவை ஒப்பனைகள் ஏதுமின்றி கற்பனைகள் அவசியமின்றி இருப்பறிய முடியா
 இருட்டறைக்குள் கழிகின்றன
என் பொழுதுகள் .
என் அசைவுகளை
 உன் இசைவின்றி நானே
இங்கு தீர்மானிக்கிறேன் .
சாளரங்கள் அற்ற இவ்வறையில் என் பெருமூச்சைக் கூட உன்னால் கேட்க  முடியாது .
பூனைக்குப் பயந்த எலியாய்
புறந்தள்ளி இருக்கும் என்னை
உன் வரவால் வாசலுக்கு இழுத்துவிடாதே
இருட்டறைகள் எனக்கு இதமானவை