லாடம்

நடக்கச் செருப்பு மாட்டக்
கால்களை நகர்த்தினேன்

கால்களுக்குக் கீழ் திப்பல் திப்பலாய் குருதித்திட்டு!
நிழலாடுகிறது மனதின் மர்மப்பகுதியில் ரணம்.

சமாதானபுரத்துப் போக்குவரத்துப் பணிமனைமுன்
காளையின் கால்களைச் சுருக்கிடுகின்றன
அவனது கறுப்புக் கரங்கள்
இன்னபிற கரங்கள் அதைச் சாய்க்க.

பக்கவாட்டில் கால்களைக்குவித்துச்
சாய்ந்து கிடக்கிறது அக்கம்பீரக்காளை!

தோல்பையைத் துழாவி அக்கரம்
லாடத்தையும் கூரிய ஆணிகளையும்
எடுக்கிறது
கால் குளம்பில் வைத்துச் சுத்தியால்
அடிக்கிறது
எஞ்சிய இடங்களைக் கூருளி
செதுக்கித் தள்ளுகிறது.

வாடிவாசலில் சீறிப்பாய்ந்த அந்தச்சீவனை
அதற்குமேல் பார்க்கச் சகிக்கவில்லை.

என் பாதத்திற்குக் கீழும் லாடங்கள்
ஆணிகள்அடிகள்
செருப் பணியத் தோன்றவில்லை
வெற்றுக் காலோடு நடந்தேன்
வலித்தது
ஒவ்வோர் அடியும்.

                                          - முனைவர். ச. மகாதேவன்