காலச்சக்கரம்

          தொடக்கமற்று முடிவுமற்று
          ஆச்சர்ய ஆரக்கால்களோடு
          வாழ்வுப் புள்ளியை மையமிட்டுச் சுழல்கிறது
          காலச்சக்கரம்.

    கிரகங்களினூடே உருண்டோடி
    சமுத்திர ஆழத்திலும் விழுந்தோடிச்
    சுக துக்கங்களை
    மானிடத்தில் மாட்டிவைத்துக்
    காலச்சக்கரம் காலம் கடந்து சுழல்கிறது
   
          கிளம்பிய இடமும்
          அடையும் இடமும்
          சற்றும் புலப்படவில்லை.

           பிறப்புக்கும் இறப்புக்கும்
           மத்தியில் பிரபஞ்சத்தைப்
          பிடிவாதமாய் சுழல வைக்கிறது

    இது விடுவித்த
    புதிர்களுக்கு விடைதேட முடியவில்லை

       காலத்தை அளந்திடுமா
         காலண்டர் தாள்கள்?
          காலத்தின் ஆழத்தை
          அளக்க முயன்றவர்கள்
          ஆழ மண்ணிற்கு
          அடியில் போனார்களே!

    காலத்தின் முன் காணாமல்
    போனவர்கள்
    உண்டாக்கிய மாயத்தோற்றங்கள்
    மானுடப் பரப்பெங்கும்

     நிலைக்காத நீர்க்குமிழிதானே 
    வாழ்க்கை
    அது சரி….
    காலம் எப்போது
    காலமாகும்? உங்களுக்கேனும் தெரியுமா?


                             - முனைவர். ச. மகாதேவன்