தனி யொருவனுக்கு உணவிலை பாரதி!

பழுக்கக் காய்ச்சிய அரிவாளைச்
சுத்தியலால் அடித்துத் தண்ணீரில் முக்கும்போது
ஒரு சத்தம் வருமே.

அடிவயிற்றில் அதே சத்தத்தோடு
பசியைப் பற்றியபடி
குப்பைத் தொட்டியருகே
அவன் குந்தியிருக்கிறான்...
தெருநாயின் பார்வையிலும் போட்டியாளனாய்

மகாராஜநகர் திருமண மண்டபத்திற்கு
இடப்பக்கமுள்ள தண்டவாளக்
குப்பைத் தொட்டிக்கு
அவன் பிள்ளைகளும்
பிச்சைக்குப் போயிருக்கின்றன

வெகுநேரமாய் காத்துக்கிடந்தும்
ஓர் இலைகூட
வெளியே வீசப்படவில்லை
இனி எச்சில் இலையும்
வெளியே வராதாம்.
அதையும் ஒருவன்
கான்ட்ராக்ட் எடுத்துள்ளானாம்.

இப்போது
பசியின் பந்தியில்
பாவம்
அவனும் அவன் பிள்ளைகளும்