உரலையாவது புரட்டு

உலகெங்கும் புரட்சிகள் நடந்தாலும்
உன் கவனம்
உரசல் பாடல்களின் உட்பொருள்
உளறல் குறித்துத்தான்.

தீவுகளெங்கும் தீப்பற்றி எரிந்தாலும்
உன் கவனம்
ஐ.பி.எல். போட்டிகளின்
ஓட்ட உயர்வு குறித்துத்தான்.

அவனியெங்கும் அணுக்கதிர்வீச்சில்
அழிந்தாலும்
உன் கவனம்
இணையத்தில் இறக்கம் செய்யப்பட்ட இரகசியக்
காட்சிகள் குறித்துத்தான்.

நாடெங்கும் ஊழல் மலிந்தாலும்
நாளை ஊதியம் உயருமா? என்பதைக்
குறித்துத்தான்.

உலகின் உலக்கை – நம்
வலக்கை உடைத்து
தலையைத் தாக்காத வரை
உன் மெத்தனம் குறித்து
நீ ஒரு தினம் கூட
வருந்தப் போவதில்லை.
  - முனைவர். ச. மகாதேவன்