மகாபாரதி


*    மரியாதைக்குரிய மகாபாரதியே!                 சீக்குப்பிடித்த சிந்தனைகளின்
    போக்குப் பிடிக்காமல்
    முதுகெலும்போடு நம் தாயகத்தை
    முன்னேற்றத்துடித்த எங்கள்
    பிரபஞ்சப் பிதாமகனே!

*    லஞ்சமும் வஞ்சமும் என்
    தேச மஞ்சத்தில் சயனித்தபோது
    மண்டையோட்டை உடைத்தாலும்
    மறுபேச்சுப் பேசாத மக்களுக்காய்
    காகிதத்தில் ஆயுதம் செய்து
    போராடிய புறநானூற்று போர்க்கவிஞனே!

*    தோளில் தொங்கும் தோல்பை மாதிரி
    தோல்வியில் தொங்கிக் கொண்டிருந்த
    என் தேச இந்தியனை நோக்கி
    ” இரணப்பட்டுப் போனவனே!
    சினப்படப்பா சில காலம்..
    குணப்படட்டும் நம் தேசம்
    என்று ரௌத்திரம் பழகச் சொன்னவனே!

*    யுகமே கண்ணீரில் மிதந்தபோதும்
உன் முகங்கள் நெருப்பை உமிழ்ந்தன
விடுதலை விறகு வாங்கி
அடிமன அடுப்பில் அக்கினிக்குஞ்சால்
சுட்டவனே!
வெந்து தணிந்தது இக்காடு
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும்
உண்டோ?

*    மகா பாரதியே!
இப்போதும் உன் எட்டயபுரம் இருக்கிறது…
உன் காணி நிலத்தில்
ரியல எஸ்டேட்பலகைகள்.
இப்போதும் உன் பாரதம் இருக்கிறது
சுரண்டலுக்கு மிச்சமற்று
அதற்கு மத்தியிலும்
நம்பிக்கையோடு நானிருக்கிறேன்
காரணம்...
உன் கவிதைகள் மிச்சமிருக்கின்றனவே!