அலை

ஆர்ப்பரிக்கும்
அலைகளினூடேயும்
அமைதியாக
சலனமற்று
சம்மணமிட்டுப் பரவிநிற்கும்
நடுக்கடல் மாதிரி
வேகமான வாழ்வுப் பரப்பிற்கு மத்தியில்
மரணம்
மவுனமாய்
மண்டியிட்டு அமர்ந்திருக்கிறது.

             - முனைவர். ச. மகாதேவன்

                     ஓட்டம் ….

மின்சேமக்கலனில்
மின்சாரம்
மிச்சமிருக்கிறவரை
ஒன்றின் மீதொன்று
ஊர்ந்து ஓடுகிற
கடிகார முட்களைப் போல
உயிர் மிச்சமிருக்கிறவரை
ஒருவரையொருவர்
காரணமில்லாமல்
கடந்து ஓடித்தானேயாக வேண்டும்.
 
                                                        - முனைவர். ச. மகாதேவன்

                     பழமொழி

  
எதுவும் தெரியாத
மக்கென்று பரிகசித்தாய்
கற்கத் துணிந்தேன்
மெத்தப் படித்த திமிரென்றாய்
மெல்ல அழுததோடு
அமைதி காத்தேன்
அமைதியும் ஒரு வகை
அகம் பாவம் தானென்றாய்
ஊமையாய் உலவினேன்
ஊமை ஊரைக் கெடுக்கும்
பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும், என்று
பழமொழி கொண்டு
பலமாகத் தாக்கினாய்
நீ குற்றம் சொல்வதிலேயே
குறியாயிருப்பவன் என்பதால்
இப்போதெல்லாம்
சும்மாயிருத்தலே
சுகமென்றிருக்கிறேன்
மூளையைக் கூர்தீட்டி
அதற்கொரு பழமொழியை
இதற்குள் தேடியிருப்பாயே!
சொல்லித் தொலை
என்ன செய்ய?
கேட்டுத் தொலைக்கிறேன்.


                                                                      - முனைவர். ச. மகாதேவன்  

              சொல்லாமலே


படியில் அமர்ந்தால்
ரித்திரம் வருமென்றாய்
தலைக்கு மேல்
தனமிருந்தாலும்
தலையணை மீதமராதென்றாய்
அரிசி தின்றால்
மண நாளன்று
மழை கொட்டுமென்றாய்
கிளம்பும் போது
நிலையில்
தலை தட்டினால்
செம்புத் தண்ணீரருந்தி
ஒருவிநாடி
அமர்ந்து செல்லென்றாய்
வரைபடத்தை
வைத்துக்கொண்டு
வானிலை அறிக்கை
வாசிக்கிற அந்த
வானிலை நிலைய
அதிகாரியைப்போல. . .
வரலாம்
வராமலும் போகலாம்
எதுவும்
நடக்கலாம்
நடக்காமலும் போகலாம்
என்ற உண்மையை மட்டும்
ஏனெனக்குச்
சொல்லாமலேயே
வளர்த்தாய் அம்மா? 
    
       - முனைவர். ச. மகாதேவன்



              லஞ்சம் தவிர் !

ஊழலில் உழல்
லஞ்சத்தில் தஞ்சமடை
யாவருக்கும் விலை வை
எதிர்த்தால்
எதிலாவது சிக்க வை
நோட்டுக்களை நீட்டு
பணத்தாசை காட்டு
சத்தியம்
சத்தமற்றுச் சாகட்டும்
வாயால் மெய்யை வெல்
நீதிக்கு வரட்டும் வியாதி
ஆகவே
என்றெல்லாம் எனக்குச் சொன்னார்கள்
இப்போது ஒன்றே ஒன்று மட்டும்தான்
என்னால் சொல்ல முடியும்
நீயேனும்
லஞ்சம் தவிர்!
                                     - முனைவர். ச. மகாதேவன்