முகம்

               



என் முகந்தனிலே
முழுசாய் பல முகத்திரைகள்
சொந்த முகந்தனைச்
சொக்கப்பனைக்
கொளுத்தி விட்டுப்
போலி முகங்களைப்
போர்த்தித் திரிகிறேன்
எவரெவர் முகமோ
என் முகமாய் ஆனது
என் முகமோ
எங்கோ போனது.

             முனைவர்.ச.மகாதேவன்


-மனம்-

                        

ஊதுபத்தியாக நீ 
ஊருக்கு உழைத்தால்
மரணித்த பின்னும்
மணத்தோடு
இருப்பாய்


               

எதிர் இணைகள்

தாஜ் மகாலுக்கு முன்னரும்
தட்டேந்திய சிறுமிகள்
அதிசயங்களும்
அவலங்களும்
அருகருகே
அழுக்கை அழிக்கும் ரப்பர்
அழுக்காயிருப்பதைப் போல....
             
- முனைவர். ச. மகாதேவன்  www.mahatamil.com                                                

       
பியூசான குழல் விளக்கிற்கு
ஒருபடி உப்புத் தந்து
சைக்கிளில் உப்பு வியாபாரம்
செய்துவந்த சந்தைப் பேட்டை
ராசையாவின் பிழைப்பிலும்
பன்னாட்டு உப்பு நிறுவனங்களின்
அயோடின் அலறல் அறிக்கை
மண்ணை அள்ளிப் போட்டது

கீரை விற்கவாவது போகலாமென்று
போனால்
பேரங்காடிகள் அவன் பிழைப்பில்
மண்ணள்ளிப் போட்டான.
பேரங்காடிக் சுவர்களில்
கணினி விலைக் குறியீட்டுடன்தான்
இனி
கீரைகள் விற்கப்பட வேண்டுமாம்.

இவர்கள் புகாத
தொழில் இருந்தால்
சொல்லுங்கள்
அவன்
பட்டினியில் சாவதற்குள்


                        - முனைவர். ச. மகாதேவன்  www.mahatamil.com